28 வருடத்துக்கு பிறகு கடவுளின் தேசத்துக்குத் திரும்பிய ஏ.ஆர்.ரகுமான்... பிருத்விராஜ் டீம் மகிழ்ச்சி
சென்னை: இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 28 வருடத்துக்கு பிறகு மலையாள சினிமாவுக்கு இசை அமைக்கிறார்.
தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத் தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்தவர், பிருத்விராஜ்.
இவர் மோகன்லால் நடித்த லூசிபர் என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இந்தப் படம் ஹிட்டானது.

ஆடுஜீவிதம்
இதற்கிடையே அவர் நடித்து வந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதையடுத்து மனைவி சுப்ரியா, மகள் அலங்கிரிதா மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதற்காக, மூன்று மாதங்களுக்கு சினிமாவுக்கு லீவு விட்டிருக்கிறார். இதையடுத்து அவர் ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடிக்கிறார்.

அமலா பால்
பென்யாமின் இதே பெயரில் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் இது. இந்தப் படம் தனக்கு முக்கியமானது என்று நடிகர் பிருத்விராஜ் தெரிவித்திருந்தார். இதை பிளஸ்சி இயக்குகிறார். இதில் அமலா பால், அபர்ணா பாலமுரளி, வினித் ஶ்ரீனீவாசன், உட்பட பலர் நடிக்கின்றனர். கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர், நடிகை மாளவிகா மோகனனின் தந்தை.

ஏ.ஆர்.ரகுமான்
இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இதன் மூலம் 28 வருடத்துக்குப் பிறகு அவர் மலையாள சினிமாவுக்கு இசை அமைக்கிறார். 1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ரோஜா மூலம் இசை அமைப்பாளர் ஆனார் ஏ.ஆர்.ரகுமான். அதை அடுத்து இரண்டாவதாக அவர் இசை அமைத்தது மலையாளப் படமான 'யோதா'. இதன் பாடல்களும் ஹிட்டாகி இருந்தன.

ஜோர்டான், எகிப்து
இதில் மோகன்லால் ஹீரோவாக நடித்திருந்தார். பிறகு தமிழ், இந்தியில் பிசியாகிவிட்ட ரகுமான் மலையாளப் படங்களுக்கு இசை அமைக்கவில்லை. இப்போது இசை அமைக்கிறார். இதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். இதன் ஷூட்டிங், ஜோர்டான், எகிப்து நாடுகளில் நடக்க இருக்கிறது. படத்துக்காக பிருத்விராஜ் 20 கிலோ எடைக் குறைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











