என் பாடல்களை ஹிந்தியில் கேட்க பிடிக்கவில்லை.. இயக்குநர் அட்வைஸ் செய்தார்.. ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன சீக்ரெட்
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என அத்தனை மொழிகளிலும் இசையில் கோலோச்சி இருக்கிறார். தமிழில் அவரது இசையமைப்பில் கடைசியாக தக் லைஃப், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இரண்டு படங்களின் இசையும் பெரிதாக கொண்டாடப்பட்டன. அடுத்ததாக தேரே இஷ்க் மெய்ன் உள்ளிட்ட ஹிந்தி படங்களும் வரவிருக்கும் நிலையில்; அந்த மொழி படங்களுக்கு இசையமைப்பது தொடர்பாக மனம் திறந்து பேசியிருக்கிறார் இசைப்புயல்.
ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதுமே எல்லோராலும் கொண்டாடப்படக்கூடியவர். அவர் இசையமைக்கிறார் என்றாலே அந்தப் படத்தின் மார்க்கெட் வேல்யூ இயல்பாகவே எகிறிவிடும். 30 வருடங்களுக்கும் மேலாக யாராலும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் அவர்; இப்போதும் தன்னுடைய இசையில் புது புது முயற்சிகளை செய்துகொண்டுதான் இருக்கிறார். தமிழ், ஹிந்தி என பறந்து பறந்து இசையமைக்கும் அவர் கைவசம் டஜன் கணக்கில் படங்களை வைத்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டி: தமிழில் அவர் எந்த அளவுக்கு உழைப்பை போடுகிறாரோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் ஹிந்தியிலும் போடுகிறார். எனவே அங்கும் அவரை ஆராதிக்கிறார்கள். அடுத்ததாக அவர் தேரே இஷ்க் மெய்ன், லாகூர் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியிருக்கிறார். இந்நிலையில் ஹிந்தி மொழி கற்றுக்கொண்டது தொடர்பாக ஒரு பேட்டியில் கமல் மகள் ஸ்ருதிஹாசனிடம் பகிர்ந்திருக்கிறார்.

இசைப்புயல் சொன்னது: அவர் அளித்த பேட்டியில், "நான் திரைத்துறைக்கு வந்தபோது என்னுடைய தமிழ் பாடல்கள் ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டன. ஆனால் தமிழ் வரிகளை அப்படியே ஹிந்தியில் மாற்றும்போது அர்த்தங்கள் மாறின. ராகத்தில் சேராத சிக்கல்கள் இருந்தன. ஹிந்தி ஆடியன்ஸும் என்னுடைய பாடல்களை ஹிந்தியில் கேட்க பிடிக்காமல் தமிழில்தான் கேட்டார்கள். அந்த மொழி படங்கள் செய்யும்போதும் எனக்கு அந்த சிக்கல்கள் இருந்தன.
இயக்குநர் செய்த அட்வைஸ்: அப்போது பாலிவுட் இயக்குநர் சுபாஷ் காய் என்னிடம், நீங்கள் ரொம்ப நல்ல இசையமைப்பாளர். ஹிந்தி தெரியாமல் பாலிவுட் படங்களுக்கு இசையமைக்க முடியாது. பாலிவுட்டில் நிலைக்க முடியாது என்று அட்வைஸ் செய்தார். அது நல்ல அறிவுரையாக எனக்கு தெரிந்தது. அதனால் ஹிந்தி கற்றுக்கொள்ள முடிவு செய்தேன். ஏற்கனவே மூன்று ஆண்டுகள் நான் உருது மொழியில் குரானை படித்திருக்கிறேன்.
இப்படித்தான் கற்றுக்கொண்டேன்: ஹிந்தி, உருது கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். உருது எனக்கு கொஞ்சம் தெரியும், எனவே அதை முழுவதுமாக கற்றுக்கொண்டு அதை வைத்து ஹிந்தியை கற்றுக்கொண்டேன். அதற்கு பிறகு தமிழ் பாடல்களை ஹிந்தியில் அப்படியே மொழிபெயர்க்காமல் புதிதாக ஹிந்தியில் பாடல் வரிகள் எழுதப்பட்டன. பஞ்சாபியும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இசைக்கு மொழி இல்லை. ஆனால் பாடல் வரிகளுக்கு மொழிகள் இருக்கின்றன. எனவே அதை கற்றுக்கொள்ளும் தேவை உருவாகிறது. எனக்கு அனைத்து மொழிகள், கலாசாரத்தின் மீது மரியாதை இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











