கோச்சடையான் கிராபிக்ஸ் மட்டும் சரியாக வந்திருந்தால்.... - ஏ ஆர் ரஹ்மான்
ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தின் கிராஃபிக்ஸ் மட்டும் மிகச் சரியாக வந்திருந்தால், அந்தப் படம் பாகுபலிக்கு நிகரான வரிசையில் இருந்திருக்கும் என்று இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் கூறியுள்ளார்.
பிரான்சில் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏஆர் ரஹ்மான் இசையில் சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பங்கேற்றனர்.
அறிமுக விழாவுக்குப் பிறகு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பேட்டியில், "ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பே சேகர் கபூர் 'பாணி' என்ற படத்தை உருவாக்க விரும்பினார். பாகுபலி பாணி படம்தான் அது. ஆனால் நிறைய பிரச்சினைகளால் கைவிட்டார்.
பிறகு 'கோச்சடையான்' திரைப்படம் உருவானது 'பாகுபலி' போன்று வந்திருக்க வேண்டிய படம்தான். ஆனால், கிராபிக்ஸ் காட்சிகள் தவறாக சென்றுவிட்டன. 'பாகுபலி' மட்டுமே முதல் முயற்சி அல்ல. அதற்கு முன்பாக பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுள்ளன என்பதற்காக இதைச் சொல்கிறேன்," என்றார்.

கேன்ஸிலிருந்து சென்னை திரும்பிய ஏ.ஆர்.ரஹ்மான், 'பாகுபலி 2' படத்தை ஒரு மாலில் பார்த்துள்ளார். படம் குறித்து அவர் கூறுகையில், "பாகுபலி 2' படத்தை தற்போதுதான் சென்னையில் பார்த்தேன். கண்டிப்பாக 2000 கோடி வசூலைத் தாண்டும் என நம்புகிறேன். நீங்கள் அனைவரும் தென்னிந்திய சினிமாவை உலக சினிமாவை நோக்கி நகர்த்தியுள்ளீர்கள்," என்று எஸ்எஸ் ராஜமௌலி குழுவைப் பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











