ஒரு எதிர்நீச்சல் வீரனின் ‘அறம்’ வென்றது!
நேற்று என்னுடைய அப்பா அறம் பார்த்துவிட்டு படம் நல்லாயிருக்கு என்று வந்து சொல்லிக் கொண்டிருந்தார். இந்த வயதிலும் எந்த ஒரு படத்தையும் தவற விடமாட்டார். அவருடைய செலவு என்பது சினிமாவுக்கும் காப்பிக்கும்தான். நான் திருமணமாகி பதினோரு வருடத்தில் ஐந்து திரைப்படங்களோ என்னவோ தான் திரையரங்கில் சென்று பார்த்து இருக்கிறோம். இன்று அறம் பார்க்கச் செல்ல வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்கள். காலையில் டிக்கெட்டுக்கு கேட்டேன். புல்லா இருக்கும் போல என்று தகவல்கள் வந்தது.
காலையில் இயக்குநருக்கு போன் செய்ய முயன்றேன். திரும்ப அவரே லைனில் வந்தார். படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்றார். மகிழ்ச்சி என்றேன்.

"இணையத்தில் அந்த தொலைக்காட்சி விவாதம் தேவையில்லாத தொய்வை ஏற்படுத்துகிறது என்கிறார்களே," என்றேன்.
"மக்கள் பரபரப்புக்காக மட்டுமே படம் பார்த்துதான் ஏமாந்து அரசியல் பேசாமல் இருக்கிறார்கள். ஏன் எல்லாக் காட்சிகளும் பரபரப்பாக இருக்க வேண்டும். ஒரு விவாதம் என்பது அவசியம் தானே," என்றார்.
நான் சொன்னேன், "வணிக ரீதியாக சரியாக வரவில்லை என்றால் எடுத்துவிடலாமே என்ன பிழை?" என்றேன்.
"அதெல்லாம் என் தோழர்களை விடமுடியாது," என்று சொன்னார் கோபி.
டப்பிங் முடிந்து திரும்பும் போது நான் சொன்னேன், "நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று தெரிகிறது. மக்களை நம்பி எடுத்துள்ளீர்கள், தமிழ் மக்கள் உங்களைக் கைவிட மாட்டார்கள்," என்று.
அவருக்கு ஆறுதல் சொல்லுபவர்கள் மிகக் குறைவு என்பதை அவ்வப்போது உணர்த்துவார். ஒரு அடிபட்ட கலைஞனின் வலி இருந்து கொண்டே இருக்கும். அவர் சைவ உணவு பத்தியம் பழங்கள் என்று இருப்பவர். ஏன் படம் எடுக்கிறீர்கள் என்று கேட்டால், நீதி கேட்கிறேன் என்று எளிதாகச் சொல்கிறார்.
அப்படி ஒரு நீதி கோருதல் எனக்குப் பிடித்தது. நிறைய படங்கள் செய்யுங்கள் என்று வாழ்த்திவிட்டு போனை வைத்தேன். காலை உழவு ஓட்டினேன். களை எடுக்க ஆட்கள் வந்துவிட்டார்கள். மதியம் பூச்சி விரட்டி தயார் செய்தேன். மாலை டிக்கெட் கிடைக்குமா என்று குடும்பத்துடன் கிளம்பினோம். ஐநாக்ஸ், பழைய சுந்தரம் எல்லாவற்றிலும் அரங்கம் நிறைந்துவிட்டது என்றார்கள். நாளை பார்ப்போம் என்று சொல்லி கூட்டி வந்துவிட்டேன்.
ஆனால் நிறைவாக இருக்கிறது. ஒரு கலைஞனின் வெற்றி. கோபியிடம் பட வேலைகளின் போது நான் சொன்னேன். கபாலி அல்லது மெட்ராஸ் எல்லாம் தலித் கேங்க்ஸ்டர்களை ஆண்டை கேங்க்ஸ்ட்டர்களின் அடுத்த வடிவமாக காட்டுகிறார்கள். அறம்தான் தலித் படம். மக்கள் இப்படித் தான் அரசியலற்று இருக்கிறார்கள். இந்த உண்மைக்காகவே இப்படம் வெற்றி பெறும் என்றேன்.
தமிழக மக்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்கள் ஒரு எதிர்நீச்சல் வீரனை உற்சாகப்படுத்தி வெற்றி பெறச் செய்துள்ளார்கள். இது அவர்களின் பிரச்சனை என்பதை தொடர்புபடுத்திக் கொண்டார்கள்.
- இளங்கோ கல்லணை


Click it and Unblock the Notifications











