பா.ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் பிரிவுக்கு தெருக்குரல் அறிவு தான் காரணமா?: அப்படி என்னதான் நடந்துச்சு?
சென்னை: 'என்ஜாய் எஞ்சாமி' பாடலைப் பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.
தெருக்குரல் அறிவு எழுதி, அவரும் தீயும் இணைந்து பாடிய இப்பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
இப்பாடல் மூலம் தற்போது கடும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இன்னொரு விவகாரமும் சூடு பிடித்துள்ளது.

மக்களின் கலைஞன் அறிவு
‘என்ஜாயி எஞ்சாமி' பாடல் மூலம் இசை ரசிகர்களையும் கடந்து பலரையும் கவனிக்க வைத்தவர் தெருக்குரல் அறிவு. அரசியல், சாதிய அடக்குமுறைகள் குறித்த ராப் பாடல்களை தமிழில் எழுதி, அசரடித்து வருகிறார். அப்படி இவரின் கடும் உழைப்பால் உருவானது தான் ‘என்ஜாயி எஞ்சாமி' பாடல். யூடியூப்பில் வெளியான இப்பாடல், இதுவரை பல மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்து வருகிறது.

செஸ் ஒலிம்பியாட்டில் புறக்கணிப்பு
‘என்ஜாயி எஞ்சாமி' பாடல் தெருக்குரல் அறிவின் முயற்சியிலும், அவரின் கற்பனையில் இருந்தும் உருவானது என்றே ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதனை அறிவும் சமீபத்தில் தனது இன்ஸ்டா பதிவின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், அதற்கான முழுமையான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே தற்போது சர்ச்சையாகியுள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் ‘செஸ் ஒலிம்பியாட்' போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில், ‘என்ஜாயி எஞ்சாமி' பாடல் பாடப்பட்டது. ஆனால், அதில் அறிவு பங்கேற்கவில்லை.

தீயிக்கு முன்னுரிமை
சந்தோஷ் நாராயணனின் மகளான பாடகி தீயிக்கு மட்டுமே இதில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் யூடியூப்பிலும், தீயின் பாடலில் அறிவு பங்கேற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் துயரங்களை விவரிக்கும் விதத்தில், தமிழ் பூர்வக்குடிகளின் இசைப் பின்னணியில் ‘என்ஜாயி எஞ்சாமி' பாடல் உருவாகியுள்ளது. இதனை வடிவமைத்ததில் பெரும்பங்கு அறிவுக்கே இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், எல்லா இடங்களிலும் தீயே முன்னிலைப்படுத்துவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

ஏற்கனவே இப்படி நடந்துருக்கு
இதனிடையே, தெருக்குரல் அறிவு ஏற்கனவே ஒருமுறை இப்படி புறக்கணிக்கப்பட்டுள்ளார். பா. ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை' படத்தில், ‘நீயே ஒளி' என்ற பாடலை எழுதியிருந்தார். இதனை அறிவு, தீ, ஆகியோரோடு ஷான் வின்செண்ட் டி பாலும் பாடியிருந்தார். அதோடு, ஷான் வின்செண்ட் ராப் பகுதியையும் எழுதியிருந்தார். இந்தப் பாடலையும், என்ஜாயி எஞ்சாமி பாடலையும் பாராட்டிய ‘ரோலிங் ஸ்டோன்' என்ற ஆங்கில இதழ், அட்டைப் படத்தில் அறிவின் போட்டோவை மட்டும் போடாமல் விட்டிருந்தது. தீ, ஷான் வின்செண்ட் மட்டும் அட்டைப் படத்தில் இருந்தனர்.

பா. ரஞ்சித் காட்டம்
இதனால், இயக்குநர் பா. ரஞ்சித் மிகவும் காட்டமாக ரியாக்ட் செய்திருந்தார். ‘ரோலிங் ஸ்டோன்' இதழின் அட்டைப் படத்தில், அறிவின் போட்டோ வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்து புயலைக் கிளப்பினார். உடனே இதுகுறித்து ஷான் வின்செண்ட் மனம் திறந்தபோதும், சந்தோஷ் நாரயணனும் தீயும் எதுவும் பேசாமல் இருந்தனர். இதனைத் தொடர்ந்தே தற்போது ‘என்ஜாயி எஞ்சாமி' பாடலும் சர்ச்சையாகியுள்ளது.
Recommended Video

அறிவுதான் காரணமா?
இதனிடையே, ‘சார்பட்டா பரம்பரை' படத்துடன் பா. ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இருவரும் பிரிந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாகின. அதனை உறுதிப்படுத்தும் வகையில், பா. ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது' படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். அதேபோல், விக்ரமுடன் இணையும் அடுத்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் கமிட் ஆகியுள்ளார். இதனால், மீண்டும் ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் கூட்டணி இணைய வாய்ப்பே இல்லை எனத் தெரிகிறது. இதற்கு தெருக்குரல் அறிவை சந்தோஷ் நாராயணன் புறக்கணித்ததே காரணம் என, நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











