செக் மோசடி வழக்கு... நடிகை ஜீவிதாவுக்கு கைது வாரண்ட்!
ஹைதராபாத்: செக் மோசடி வழக்கில் பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான ஜீவிதாவைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தர்மபத்தினி, இது தாண்டா போலீஸ், பாடும் வானம்பாடி உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் ஜீவிதா. தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரை திருமணம் செய்தார். தனது கணவருடன் பல படங்களை சொந்தமாக தயாரித்து வந்தார்.

நடிகை ஜீவிதா ஆந்திர மாநிலம் நந்தியாலாவைச் சேர்ந்த பி.வி.ஜெகதீஷ்குமார் என்பவரிடம் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 6-ந்தேதி ரூ.5 லட்சம் கடன் வாங்கினார். கடனை அடைக்க அவருக்கு 2 ‘செக்' கொடுத்தார். ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் அந்த செக் திரும்பி விட்டது.
இதையடுத்து ஜெகதீஷ்குமார் நந்தியாலா முதல்நிலை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜீவிதா மீது வழக்கு தொடர்ந்தார்.
2015-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி தொடரப்பட்ட இந்த வழக்கில் ஆஜராகும்படி ஜீவிதாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் அவர் ஆஜராகவில்லை.
இதனால் ஜீவிதாவைக் கைது செய்ய வாரண்டு பிறப்பித்து நீதிபதி ராமமோகன் உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











