முறை மாப்பிள்ளை டு மாஃபியா.. 25 ஆண்டுகள்.. அருண் விஜய் கடந்து வந்த பாதை! #25YearsOfArunVijay
Recommended Video
சென்னை: வரும் பிப்ரவரி 21ம் தேதி வெளியாகவுள்ள மாஃபியா படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் நடிகர் அருண் விஜய், சினிமாவில் தடம் பதித்து 25 ஆண்டுகள் ஆகி உள்ளன.
1995ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை படத்தில் அறிமுகமான அருண் விஜய், மாஃபியா படம் மூலம் தனது 25 ஆண்டு திரை வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறார்.
வெற்றிகளை விட அதிக தோல்விகளை சந்தித்த அருண் விஜய், அந்த தோல்விகளில் இருந்தே பாடம் கற்றுக் கொண்டு, மீண்டும் வெற்றிப் படி ஏறி வருகிறார்.

ஏ.ஆர். ரஹ்மான் படம்
எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் இருந்து, இப்போது வரை தனது நடிப்பால், கோலிவுட்டில் நாட்டாமை செய்து வரும் நடிகர் விஜயகுமாரின் ஒரே மகன் தான் அருண் விஜய். ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்தின் மூலம் அறிமுகமாக காத்திருந்த அருண் விஜய்க்கு, அந்த படம் தாமதம் ஆனதால், சுந்தர். சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானார்.

படிப்பினையான தோல்விகள்
பெரிய பெரிய சாதனைகளை புரியும் மனிதர்கள், ஒவ்வொருவரும், பல முறை தோல்விகளை சந்தித்துத் தான் சரித்திரம் படைத்திருக்கின்றனர். பிரபல நடிகரின் மகன் என்பதால், ஈசியா திரைத்துறையில் சான்ஸ் கிடைச்சுடுச்சு, வாரிசு நடிகர் போன்ற பேச்சுக்களில் அடிபட்ட அருண் விஜய் நடித்த பல படங்கள் பெரும் தோல்விகளையே சந்தித்தன.

விஜய் சொன்ன அட்வைஸ்
தொடர் தோல்விகளால் துவண்டு போன, நடிகர் அருண் விஜய், ஒரு கட்டத்தில், சினிமாவை விட்டே விலகி விடலாம் என எண்ணி விட்டாராம். அதன் பிறகு, நடிகர் விஜய் சொன்ன அட்வைஸால் தான் மீண்டும் சினிமாவுக்கு திரும்பி, நல்ல கதைகளை கேட்க ஆரம்பித்தேன் என சமீபத்தில், ஒரு பேட்டியில் அருண் விஜய் கூறியிருந்தது விஜய் ரசிகர்களும், அருண் விஜய்க்கு சப்போர்ட் செய்ய உதவியது.

கைகொடுத்த விக்டர்
1995ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை பல ஃப்ளாப் படங்களையும், சில ஹிட் படங்களையும் கொடுத்து வந்த நடிகர் அருண் விஜய்க்கு, கெளதம் மேனன் இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால், படம் மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. வில்லன் விக்டராக மிரட்டிய அருண் விஜய்க்கு அன்று முதல் இன்று வரை வெற்றிகள் தொடர்கின்றன.

நல்ல நடிகர்
அஜித்தின் என்னை அறிந்தால் படத்திற்கு முன்னதாக, அருண் விஜய் நடித்த, பாண்டவர் பூமி, இயற்கை, தவம், ஜனனம், மாஞ்சா வேலு, வேதா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில், அருண் விஜய்க்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. சாக்லேட் பாயாக நடித்து வந்த அருண் விஜய், ஆக்ஷன் அவதாரம் எடுத்து தற்போது வெர்ஷன் 2.0 ஆக மாறி வேட்டையாடும் ஆர்யான் ஆக வரப்போகிறார்.

தைரியம் கொடுத்த தடம்
என்னை அறிந்தால் படத்தில் மிரட்டல் வில்லன் விக்டராக, நடித்த அருண் விஜய்க்கு, அடுத்தடுத்து நல்ல படங்கள் வர ஆரம்பித்தன. நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில், தியாகுவாக கலக்கினார். எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த ஆண்டு வெளியான மகிழ் திருமேனியின் தடம் படம் அவருக்கு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தது.
25ம் ஆண்டு கொண்டாட்டம்
லைகா நிறுவனம் தயாரிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில், அருண் விஜய், பிரசன்னா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள மாஃபியா திரைப்படம், வரும் பிப்ரவரி 21ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை அருண் விஜய்யின் 25வது ஆண்டு கொண்டாட்டத்தை லைகா நிறுவனம் வேற லெவலில் கொண்டாடி உள்ளது.
டிரெண்டாகும் ஹாஷ்டேக்
மாஃபியா படக்குழுவுடன் தனது சினிமா வாழ்க்கையின் 25வது ஆண்டை கொண்டாடிய அருண் விஜய்யை, அவரது ரசிகர்கள் மற்றும் தல அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து வாழ்த்தி வருகின்றனர். விரைவில் வெளியாக உள்ள மாஃபியா படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

வரிசைக் கட்டி நிக்குது
மாஃபியா படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் நடிகர் அருண் விஜய் கைவசம் நிறைய புதிய படங்கள் வரிசைக் கட்டி நிக்குது. மூடர் கூடம் நவீன் இயக்கத்தில் அக்னிச் சிறகுகள், விவேக் இயக்கத்தில் பாக்ஸர், குமரவேலன் இயக்கத்தில் சினம் மற்றும் அறிவழகன் இயக்கத்தில் ஏவி 31 என பல படங்கள் உருவாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











