அருணாச்சலம் படத்தில் ரஜினியுடன் நடித்த குரங்கு மரணம்!
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து மிகப் பெரிய வெற்றிப் பெற்ற படம் அருணாசலம்.. அதில் ஒரு காட்சி.
பஸ்சில் ஊருக்குப் புறப்படத் தயாராக இருப்பார் ரஜினி.
அப்போது அங்கு வரும் ஒரு குரங்கு அவரது கழுத்தில் கிடந்த ருத்ராட்சையைப் பறித்துக் கொண்டு ஓடும். இதையடுத்து ரஜினியும் அதை பின் தொடர்ந்து செல்வார். அப்போதுதான் அவரது பின்னணி தெரியவரும்.

அதுவே அருணாச்சலத்தின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.
அந்த காட்சியில் நடித்த குரங்கின் பெயர் ராமு. சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த நேரு என்பவரால் வளர்க்கப்பட்ட இந்த குரங்கு, சில படங்களில் நடித்துள்ளது.
பின்னர் நேரு தன் குடும்பத்துடன் சென்னைக்கு சென்று விட்டார். போகும்போது, இந்தக் குரங்கை சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தார். கடந்த சில ஆண்டுகளாக இது வனத்துறையினரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தது.
ராமு குரங்குக்கு 33 வயதான நிலையில் மூப்பின் காரணமாக நேற்று மரணம் அடைந்தது. சேலம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட ராமு, பரிசோதனை முடிந்ததும் அடக்கம் செய்யப்பட்டது.
பொதுவாக குரங்குகள் 25 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை தான் உயிர் வாழும். ஆனால் இந்த குரங்கு மட்டும் 33 ஆண்டுகள் உயிர் வாழ்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











