இந்த ஆர்யாவுக்கு சத்யஜித் ரேவையும் தெரியல... அம்பிகாவையும் தெரியல! - விஷால்
நடிகர் ஆர்யாவுக்கு சத்யஜித் ரேவையும் தெரியல, அம்பிகாவையும் தெரியல என்று கூறி அதிர வைத்தார் நடிகர் விஷால்.
லட்சிய நடிகர் எனப் புகழப்பட்ட எஸ்.எஸ். ராஜேந்திரனின் முதலாம் நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று மாலை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் விஷால் பேசியது:
எனக்கு இன்று மிகுந்த காய்ச்சல். பேசி பேசியே காய்ச்சல் வந்துவிட்டது. இருக்கட்டும் இன்னும் 5 நாட்கள்தான் தேர்தலுக்கு உள்ளது. எனக்கு மேடையில் பேச வாய்ப்பளித்த எஸ்.எஸ்.ஆர் அவர்களின் குடும்பத்தினருக்கு நன்றி.
இதைப் போன்ற மேடையில் எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம். இங்கே விஜய குமாரி அம்மாவின் அருகே அமர்ந்து பேச எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அரிய வாய்ப்பு இது. எனக்கு அவர்கள் அருகே அமர்ந்திருப்பது இன்னும் மகிழ்ச்சி. ஏன் என்றால், என்னுடைய தந்தை விஜய குமாரி அம்மாவின் மிகப் பெரிய ரசிகர். இப்போது தொலைகாட்சியில் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டு இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.

வாரம் வாரம் வெள்ளிக் கிழமை ஒரு புது பையன் ஒரு புது பொண்ணு என்று வரிசை கட்டி வந்து கொண்டு இருக்கும் இந்த வேலையில் என்னுடைய ஆசை எல்லாம் பழம்பெரும் நடிகர் , நடிகைகள் மற்றும் சாதனையாளர்களை எல்லா நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டும் என்பதுதான். இதை நான் தேர்தல் சமயத்தில் கூறுவதால் எல்லோரும் தவறாக நினைக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இதை நான் மனதில் இருந்து பேசுகிறேன். நமக்கெல்லாம் அவர்கள் தான் வழிகாட்டிகள்.
அவன் இவன் படத்தின் படபிடிப்பில் இருக்கும் போது ஆர்யா என்னிடம் சத்தியஜித் ரே அவர்களை பற்றி நான் ஒரு நாள் பேசியதை நினைவில் வைத்து, சத்ய ஜோதி நிறுவனத்தை நினைவு கூர்ந்து பேசினார். நிஜமாகவே அவருக்கு சத்தியஜித் ரே அவர்களைத் தெரியவில்லை. அதே போல் ஆர்யா அம்பிகா அம்மாவை புதுமுகமா என்று ஒரு நாள் கேட்டு என்னை அதிரவைத்தார். நான் அவர்களை அழைக்க வேண்டும் என்று கூறுவதற்கு காரணம் இது தான்.

நான் இன்னும் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எஸ்.எஸ்.ஆர், எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் ஆத்மா எங்களுக்குள் இப்போது இறங்கி நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட எங்களை தயாராக்கி வருகிறது," என்றார்.
லட்சிய நடிகரின் மகன் ராஜேந்திரன் பேசுகையில், "என் மகன் பங்கஜ் குமார் நடிகர் சங்கத்தில் உள்ளார். அவர் என்னிடம் வந்து பாண்டவர் அணி இந்த விழாவை சிறப்பாக எடுத்து நடத்த விரும்புவதாக கூறினார். நான் கண்டிப்பாக நடத்தலாம் என்று கூறினேன். எப்போது பாண்டவர் அணியினர் எங்களுக்கு ஆதரவாக விழாவை நடத்த முடிவெடுத்தார்களோ, அப்போதே நாங்களும் பாண்டவர் அணியில் ஒருவர் ஆகிவிட்டோம். லட்சிய நடிகரை போல் தெளிவான தமிழிலில் பேச இங்கு எவரும் இல்லை. எந்த ஒரு நடிகரும் அழகாக தமிழிலில் பேச வேண்டும் என்று நினைத்தால் அவர்கள் அனைவரும் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் படத்தை பார்க்க வேண்டும்," என்றார்.


Click it and Unblock the Notifications











