படம் பார்க்க சென்ற ஷங்கர்.. பயந்துபோய் பிட்டு சீன்களை கட் செய்த தியேட்டர்.. ஆத்தாடி என்ன கூத்து பாருங்க
சென்னை: இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் ஷங்கர். அவர் இப்போது இயக்கும் படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. கடைசியாக அவர் இயக்கிய கேம் சேஞ்சர், இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வியைத்தான் சந்தித்தன. அடுத்ததாக வேள்பாரி நாவலை படமாக எடுக்கவிருக்கிறார். இந்நிலையில் அவர் பற்றிய சுவாரஸ்யமான் சம்பவத்தை பார்க்கலாம்.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் இயக்குநர் பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு இயக்குநராக மாறியவர் ஷங்கர். முதல் படமான ஜென்டில்மேன் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய முதல்வன், இந்தியன், காதலன், ஜீன்ஸ், அந்நியன், எந்திரன் என வரிசையாக ஹிட் படங்கள் அமைந்தன. அதனால் இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என்ற பெயரை பெற்றார்.
சறுக்கிய ஷங்கர்: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவருக்கு ஐ படத்திலிருந்து சறுக்கல் ஆரம்பித்தது. அந்தப் படத்தின் தோல்வி கொடுத்த வடு மறைவதற்குள் 2.0 திரைப்படமும் தோல்வியடைந்தது. இப்படிப்ப்பட்ட சூழலில் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கினார். அப்படமும் தோல்வி. அடுத்ததாக இயக்கிய கேம் சேஞ்சரும் படுதோல்வி. இப்போது அவரது மாக்கெட் சுத்தமாக படுத்துவிட்டது. எப்படியாவது வேள்பாரி நாவலை படமாக எடுத்து கம்பேக் கொடுத்துவிட வேண்டும் என்று உழைத்துவருகிறார்.

உதவி இயக்குநரின் ஷேரிங்ஸ்: இந்நிலையில் ஷங்கரிடம் ஜென்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ் என ஏராளமான படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த முத்துவடுகு ஷங்கர் பற்றி ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், "" பாய்ஸ் " படத்திற்கு கதை விவாதத்திற்காக கேரளா சென்று இருந்தோம். காலையில் ஷங்கர் சாரும், சுஜாதா சாரும் வருவதற்கு முன்விவாதத்திற்கு எங்களை நாங்களே தயார் படுத்திக் கொண்டிருந்த போது எடுத்த புகைப்படம் இது.
அன்று மிகப்பெரிய சம்பவம் நடந்தது. சுஜாதா சார் அவர்கள் அந்த நேரத்தில் "ஆனந்த விகடன்" வாரப் பத்திரிக்கையில் வாராவாரம் "கற்றதும் பெற்றதும்" என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் பார்த்த, பாதித்த சம்பவங்களை சிறு சிறு கட்டுரையாக எழுதி வந்தார். அன்று கேரளாவில் ஒரு மலையாள படம் பார்த்துவிட்டு அந்த அனுபவத்தை ஏதோ ஒரு வாரத்தில் எழுத ஆசைப்பட்டார். அதன்படி அன்று இரவு நாங்கள் அனைவரும் இரண்டு கார்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு கிராமத்து திரையரங்கிற்கு சென்றோம்.
திடீரென எழுந்த சத்தம்: படம் போட்ட ஐந்து நிமிடங்கள்தான் இருந்ததால் நாங்களும் பரபரப்பாக காரை விட்டு இறங்கி, வேகமாக டிக்கெட் எடுத்து தியேட்டருக்குள் நுழைந்தோம். அப்பொழுது தியேட்டர் ஊழியர்கள் எங்களை வெறிக்க வெறிக்க பார்த்தார்கள். உள்ளே சென்று அமர்ந்தோம். ஐந்தாவது நிமிடம் படம் போடப்பட்டது. சிறிது நேரத்தில் ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி வரும் போது திடீரென்று படம் பார்ப்பவர்கள் கூச்சலிட்டார்கள்.
அடையாளம் தெரிந்துகொண்டார்கள்: எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மீண்டும் அமைதியாக படம் ஓடிக் கொண்டிருந்தது. அமைதியாக படம் பார்த்தார்கள். மீண்டும் திடீரென்று ஒரு காட்சி முடிந்து அடுத்து காட்சி ஆரம்பிக்கும் இடத்தில் மீண்டும் மக்கள் கூச்சலிட்டார்கள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இப்படி படம் முழுக்க பல இடங்களில் ஆங்காங்கே கூச்சலிட்டார்கள். ஒன்றும் புரியவில்லை படம் முடிந்து வெளியே வந்த போதுதான் வெளிச்சத்தில் தியேட்டர் ஊழியர்கள் எங்களை நன்றாக பார்த்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் தெரிந்துகொண்டார்கள். அதன்பிறகு எங்களிடம் நெருங்கிப் பேச ஆரம்பித்தார்கள்.
பிட்டுகளுக்கு கட்: "இது கிராமப் பகுதி. இங்கு பெரும்பாலும் யாரும் இரவில் பேன்ட், சட்டை போட்டு, இன் பண்ணி, ஷு போட்டு படம் பார்க்க வருவதில்லை. மேலும் காரில் யாரும் படம் பார்க்க வருவதில்லை. ஆகவே உங்களை பார்த்ததும் எங்கள் திரையரங்கை சோதனை போட வந்துள்ள அதிகாரிகள் என நினைத்து, பயந்து, படத்திற்கு சம்பந்தமில்லாமல் ஆங்காங்கே ஒட்டி ஓட்டிய பிட்டு படக் காட்சிகளை அவசர அவசரமாக கட் பண்ணி எடுத்து விட்டோம்.
ஆகவேதான் இரண்டாவது முறையாக படம் பார்க்க வந்தவர்கள் அந்த காட்சிகள் இல்லாததால் ஏமாற்றத்தோடு அந்தந்த இடங்களில் கூச்சலிட்டார்கள். " என இந்த உண்மையை தியேட்டர் ஊழியர்களே எங்களிடம் சொல்ல சொல்ல, அவர்கள் கொடுத்த குளிர்பானத்தை குடித்துக் கொண்டே கேட்டு, ரசித்து, மகிழ்ந்தோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











