கார்த்தி படத்தை காப்பி அடித்தாரா அட்லி? ஷாருக்கானுக்கு இந்த மேட்டர் தெரிஞ்சா என்ன ஆகும்?
சென்னை: இயக்குநர் ஷங்கரின் சிஷ்யன் என தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குநர் அட்லி இதுவரை தமிழில் இயக்கிய 4 படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன.
அட்லி இயக்கிய முதல் படமான ராஜா ராணி படமே மணிரத்னம் இயக்கிய மெளன ராகம் படத்தின் காப்பி தான் என பலரும் அட்லியை ட்ரோல் செய்தனர்.
ஆனால், அட்லியின் மேக்கிங் பிடித்துப் போய் நடிகர் விஜய் தொடர்ந்து 3 படங்களில் நடித்தார்.

காப்பி கேட் பட்டம்
தெறி படம் கேப்டன் விஜயகாந்தின் சத்ரியன் படம் என்று சொல்லப்பட்டது. பாட்ஷா படத்தின் சில காட்சிகளும் படத்தில் இடம்பெற்றதாக ட்ரோல் செய்யப்பட்டது. மெர்சல் படத்தை அபூர்வ சகோதரர்கள் படத்தில் இருந்து ஆட்டையைப் போட்டு எடுத்தார் என்றும் பிகில் படம் ஷாருக்கானின் சக்தே படத்தின் காப்பி என்றும் ட்ரோல் செய்யப்பட்டது. மேலும், சில ஹாலிவுட் படங்களின் காட்சிகளை அப்படியே மாற்றி அட்லி பிகில் படத்தை இயக்கி இருந்தார் என்றும் ஆதாரங்களுடன் நெட்டிசன்கள் போட்டு விமர்சித்தனர்.

அரைச்ச மாவ அரைச்சாலும்
எத்தனை போடி பாட்டுப் போட்டாலும் 7 ஸ்வரம் தான் என அட்லியே தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்துக்கு பேட்டி ஒன்றில் பதில் அளித்திருந்தார். மேலும், அரைச்ச மாவ அரைச்சாலும் அதுக்கும் வேணும் ஒரு திறமை என்கிற சீமராஜா பாடலை போல அட்லி இயக்கும் படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து வந்த நிலையில், ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் ஜவான் படத்தையே இயக்கும் வாய்ப்பும் அட்லிக்கு கிடைத்தது.

ஜவான் படமும் காப்பியா
ஏற்கனவே ஜவான் திரைப்படம் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் காப்பி என சில தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கார்த்தி நடிப்பில் வரும் தீபாவளி வெளியீடாக ரிலீஸாகவுள்ள சர்தார் படத்தின் அப்பட்டமான காப்பி தான் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்து வரும் ஜவான் திரைப்படம் என பரபரப்பு கருத்துக்கள் வெளியாகி உள்ளன.

அப்பா மகன்
அப்பா ரா ஏஜேன்ட், மகன் போலீஸ் அதிகாரி. அப்பா மீது சுமத்தப்பட்ட பழியை துடைக்க மகன் செய்யும் போராட்டம் தான் இரண்டு படங்களின் கதை என்றும் ஒரே போடாக போட்டுள்ளனர். இந்த விஷயம் ஷாருக்கானுக்கு தெரிந்தால் என்னவாகும் என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

எடிட்டர் ரூபன் ட்வீட்
நெட்டிசன் கிறிஸ்டோபர் கனகராஜ் என்பவர் போட்ட பதிவை பார்த்து விட்டு எடிட்டர் ரூபன் உங்களுடைய மன தைரியத்தை பாராட்டுகிறேன். ஆனால், எதை வேண்டுமானாலும் இஷ்டத்துக்கு சொல்லலாமா? என கேள்வி எழுப்பி உள்ளார். இரண்டு படங்களும் வெளியானால் தான் உண்மை வெளியாகும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











