மகேஷ் பாபுவுடன் கைகோர்க்கும் அட்லீ?
ஹைதராபாத்: தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன், இயக்குநர் அட்லீ கைகோர்க்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அட்லீ. இப்படம் தமிழ் தவிர்த்து தெலுங்கு மொழியிலும் வெளியாகி வெற்றி பெற்றது.
'ராஜா ராணி'க்குப் பின் விஜய் நடிப்பில் இவர் இயக்கியிருக்கும் 'தெறி' வருகின்ற 14 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்நிலையில் மகேஷ் பாபுவை அட்லீ இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அட்லீ 'பிரமோத்சவம்' படப்பிடிப்பிற்கு சென்று மகேஷ்பாபுவை சந்தித்திருக்கிறார்.
அட்லீ சொன்ன ஒருவரிக் கதை மகேஷ்பாபுவைக் கவர கதையை டெவலப் செய்யுமாறு கூறி விட்டாராம். மகேஷ் பாபுவின் இமேஜுக்கு ஏற்றவாறு ஆக்ஷன்+ ரொமான்ஸ் என்ற ரீதியில் இப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
'ராஜா ராணி' படத்திற்குப் பின் தெலுங்குத் திரையுலகில் இருந்து ஏராளமான வாய்ப்புகள் அட்லீயைத் தேடி வந்தன. ஆனால் விஜய் பட வாய்ப்பால் தெலுங்குலகில் கால் பதிக்கும் வாய்ப்பை அட்லீ தவறவிட்டார்.
தற்போது மீண்டும் தெலுங்குப் பட வாய்ப்பு சூப்பர் ஸ்டார் மூலமாக அட்லீக்கு கிடைத்திருக்கிறது. அட்லீ-மகேஷ்பாபு படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications