ஐஸ்வர்யா தாக்குதல் வழக்கு து. நடிகைக்கு முன்ஜாமீன்
நட்சத்திர ஹோட்டலில் ஜோடி போட்டு டான்ஸ் ஆடும்போது ஏற்பட்ட தகராறில் நடிகை லட்சுமியின் மகள் நடிகை ஐஸ்வர்யாவைத் தாக்கியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், துணை நடிகை ப்ரீத்தி உன்னிக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
| Click here for more images |
நடிகை ஐஸ்வர்யா சில நாட்களுக்கு முன்பு அடையாறில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டார்.
பார்ட்டியின்போது ஆண்களும், பெண்களும் இணைந்து டான்ஸ் ஆடினர். அப்போது ஒருவருடன் ஜோடி போட்டு ஆடுவது தொடர்பாக ஐஸ்வர்யாவுக்கும், துணை நடிகையான ப்ரீத்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இருவரும் தெருவில் நடக்கும் குழாயடிச் சண்டை போல கட்டிப்புரண்டு சிண்டைப் பிடித்துக் கொண்டு சண்டை போட்டனர். அங்கிருந்தவர்கள் உள்ளே புகுந்து இருவரையும் பிரித்து விட்டனர்.
பின்னர் ப்ரீத்தி உன்னி, ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு அடியாட்களுடன் வந்து வீட்டு வேலைக்காரப் பெண்ணை மிரட்டி விட்டுச் சென்றதாக அமைந்தகரை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா புகார் கொடுத்தார். மேலும் தனது கைப்பையையும் ப்ரீத்தி திருடி விட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஐஸ்வர்யாவுக்கு உத்தரவிட்டும் அவர் இதுவரை போகவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில், ப்ரீத்தி உன்னி சார்பில் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பழனிவேலு, ரூ. 5000 ரொக்க ஜாமீனிலும், அதே தொகைக்கு இரு நபர் ஜாமீனிலும், எழும்பூர் நீதிமன்றத்தில் சரணைடந்து முன்ஜாமீன் பெறலாம் என உத்தரவிட்டார்.
மேலும் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டால் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் ப்ரீத்திக்கு உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











