ரூ 600 கோடியைத் தாண்டியது பாகுபலி 2 வசூல்... வார நாட்களிலும் க்யூவில் காத்திருக்கும் மக்கள்!
எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பாகுபலி 2 படம் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் படம் நான்கு நாட்களில் ரூ 625 கோடிகளைக் குவித்து சாதனைப் படைத்துள்ளது.
வார நாட்களில் பொதுவாக வசூல் குறையும் என்பார்கள். ஆனால் பாகுபலிக்கோ திங்கள், செவ்வாய் ஆகிய வார நாள்களிலும் கூட்டம் குறையவில்லை. புற நகர்ப் பகுதிகளில் உள்ள ஒற்றைத் திரை அரங்குகளும் கூட நிறைந்து காணப்படுகின்றன. காலை 8 மணிக் காட்சிக்கே கூட்டம் அலைமோதுவதைப் பார்க்க முடிகிறது.

ஆந்திரா, தெலங்கானா பகுதிகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து டிக்கெட் வாங்குவது இப்போதும் தொடர்கிறது.
இந்தியாவில் மட்டும் கடந்த நான்கு நாட்களில் பாகுபலி 2 ரூ 490 கோடிகளைக் குவித்துள்ளது. வெளிநாடுகளில் மொத்தம் ரூ 135 கோடிகள் வசூலாகியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆக உலகெங்கும் ரூ 625 கோடிகளை பாகுபலி குவித்துள்ளது இதுவரை இந்திய சினிமா வரலாறு காணாத ஒன்றாகத் திகழ்கிறது.
இந்தியில் மட்டும் மூன்று நாட்களில் ரூ 128 கோடிகளை வசூலித்து, சுல்தான் (105), டங்கல் (107) படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது பாகுபலி 2. இந்த தகவலை படத்தை வெளியிட்டுள்ள இயக்குநர் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.
தமிழில் கடந்த நான்கு நாட்களில் இந்தப் படம் 50 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











