கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னாரு?... பதில் 2017-ல் தான் தெரியுமாம்!
சென்னை: வசூலில் பெரும் சாதனை படைத்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் 2017ம் ஆண்டு தான் ரிலீசாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், நாசர், சத்யராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த படம் பாகுபலி. காட்சிகளின் பிரம்மாண்டம், கிராபிக்ஸ் என உலகளவில் பாராட்டுகளைப் பெற்ற இப்படம், வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்தது.
இந்தப் படமானது கட்டப்பா பாகுபலியைக் கொள்வதோடு முடிவடைந்திருந்தது. இதன் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு வெளியாகும் என ராஜமௌலி அறிவித்திருந்தார்.

ஷூட்டிங்...
ஏற்கனவே, முதல்பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்திற்காக காட்சிகளும் ஏறக்குறைய படமாக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள காட்சிகள் தற்போது படமாக்கப் பட்டு வருகிறது.

கட்டப்பா...
முதல் பாகம் பாகுபலியைக் கட்டப்பா கொல்லும் காட்சியோடு முடிவடைந்திருந்தது. ஏன் கட்டப்பா இவ்வாறு செய்தார் என்பதற்கான பதில் இரண்டாம் பாகத்தில் தெரியும். எனவே, இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கோடை விடுமுறைக்கு...
முதலில் பாகுபலியின் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு மே மாதம் ரிலீசாகும் எனக் கூறப்பட்டது. கோடை விடுமுறையை ஒட்டி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. பின்னர் அது அடுத்தாண்டு டிசம்பருக்கு தள்ளிப் போனது.

2017ம் ஆண்டு தான்...
ஆனால், தற்போது பாகுபலியின் இரண்டாம் பாகத்தை 2017ம் ஆண்டு ஜனவரியில் ரிலீஸ் செய்ய ராஜமௌலி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மூன்றாம் பாகம்...
ஏற்கனவே, பாகுபலியின் இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து அதன் மூன்றாம் பாகமும் வெளியாகும் என ராஜமௌலி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தள்ளிப் போனால், மூன்றாம் பாகம் வர இன்னும் கால தாமதம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











