பாகுபலி 2.. பிரபாஸ், ரம்யா கிருஷ்ணனுடன் ஷூட்டிங்கைத் தொடங்கினார் ராஜமெளலி
ஹைதராபாத்: உலகளவில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.
கடந்த ஜூலை மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் பாகுபலி. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று இப்படத்தின் 2 வது பகுதி படப்பிடிப்பை இயக்குநர் ராஜமௌலி தொடங்கி இருக்கிறார்.

பாகுபலி
ஜூலை மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று பல்வேறு சாதனைகளை தகர்த்தெறிந்த படம் பாகுபலி. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். உலகளவில் சுமார் 600 கோடிகளை வசூல் செய்து இந்தியளவில் அதிக வசூல் செய்த 3 வது படம் என்ற பெருமையை இப்படம் தக்க வைத்துக் கொண்டது.
கட்டப்பா ஏன்?
முதல் பாகத்தில் படைத்தளபதி கட்டப்பா மன்னன் பாகுபலியைக் கொல்வது போல ராஜமௌலி படத்தை முடித்திருந்தார். ராஜமௌலி ஒரு ட்விஸ்ட்டுக்காக வைத்த இந்தக் காட்சியும், கேள்வியும் தான் இந்த வருடத்தின் ஹாட் டாபிக். இந்தப் படம் வந்து 5 மாதங்கள் கடந்த நிலையிலும் ரசிகர்கள் இந்தக் கேள்வியை விடுவதாகத் தெரியவில்லை. மேலும் சமூக வலைதளங்களில் பலரும் இந்தக் கேள்வியை எழுப்பி அதற்கு ஒரு விடையையும் அவர்களே உருவாக்கி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாகுபலி 2 படப்பிடிப்பை ராஜமௌலி தொடங்கி இருக்கிறார்.
படப்பிடிப்பு
இன்று நாயகன் பிரபாஸ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோருடன் பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் ராஜமௌலி ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கி இருக்கிறார். இதை வைத்துப் பார்க்கும் போது ரம்யா கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட காட்சிகள் 2 வது பாகத்தில் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது.

அனுஷ்கா
முதல் பாகத்தில் அனுஷ்காவை ஒருசில காட்சிகள் மட்டுமே காட்டி ராஜமௌலி ஏமாற்றி விட்டார். இந்த பாகத்தில் ராஜமௌலி அதற்குப் பரிகாரம் தேடுவது போல மிகவும் இளமையாக அனுஷ்காவை காட்டவிருக்கிறார். இஞ்சி இடுப்பழகி படத்திற்காக சுமார் 20 கிலோ எடையை அதிகரித்த அனுஷ்கா தற்போது எடை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி அதில் வெற்றியும் கண்டு வருகிறார். மிக விரைவில் படப்பிடிப்பில் அனுஷ்கா கலந்து கொள்ளவிருக்கிறார்.

மிகப்பெரிய பட்ஜெட் படங்கள்
நேற்று ஷங்கர் தனது பிரமாண்ட படமான எந்திரன் 2 வைத் தொடங்கிய நிலையில், இன்று ராஜமௌலி பாகுபலி 2 என்னும் பிரமாண்டத்தைத் தொடங்கியிருக்கிறார். இந்த 2 படங்களும் இந்தியளவில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படங்கள் என்பதால்,2 படங்களுக்குமான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் ஏகத்திற்கும் எகிறிக் கிடக்கிறது. 2 படங்களுமே தென்னிந்தியத் திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











