பாகுபலி.. முதல் நாள் வசூல் ரூ. 30 கோடியைத் தாண்டும் - இது பாக்ஸ் ஆபீஸ் கணிப்பு!
சென்னை: இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இன்று வெளியாகி இருக்கும் பாகுபலி படம், முதல் நாள் முடிவில் 30 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா என ஏராளமான தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் படம் பாகுபலி, 2 பாகங்களில் இன்று முதல் பாகம் உலகெங்கும் வெளியாகி உள்ளது.

படம் வெளியான எல்லா மாநிலங்களிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி அனைத்து மொழிகளிலும் படம் தியேட்டர்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் போர்டு வெளியில் தொங்கும் காட்சியை இன்று காண முடிகிறது, இதனால் தியேட்டர் அதிபர்கள் பலரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
இந்தியா முழுவதும் சுமார் 4000அரங்குகளில் படம் வெளியாகி இருக்கிறது, இதைத் தவிர அமெரிக்காவில் கிட்டத்தட்ட 118 திரையரங்குகளில் படம் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவில் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமாக படம் வசூலித்து இருக்கிறது என்று கூருகிறார்கள்.
இந்தியா முழுவதும் பாகுபலி எவ்வளவு அள்ளி இருக்கிறது என்று இன்று இரவு அல்லது நாளைக் காலையில்தான் தெரியவரும். எனினும் அனைத்து திரையரங்குகளிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக படம் ஓடிக் கொண்டிருப்பதால், இன்று சுமார் 30 கோடியை பாகுபலி வசூலிக்கலாம் என்று திரையுலகைச் சார்ந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பாகுபலி படத்தின் முதல் பாகம் 250 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது, இதே வேகத்தில் சென்றால் வசூலில் போட்ட பணத்தை விட இருமடங்குத் தொகையை பாகுபலி எடுத்து விடும்.


Click it and Unblock the Notifications











