ரூ 48 கோடி... திரையரங்குகளுக்கு புது நம்பிக்கை தந்த பாகுபலி!
ஒரு வருட காலமாக மழையே இல்லாமல், பஞ்சம் பிழைக்க வேறு ஊருக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கையில் பேய் மழை பொழிந்தால் விவசாயி ஆனந்தக் கூத்தாடுவான். இதுதான் தமிழ் நாட்டில் தியேட்டர் நடத்திக் கொண்டிருப்பவர்கள் நிலைமை. 2016ல் ரீலீஸ் ஆன ரெமோ படம் பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் தியேட்டருக்கு வந்தனர். அதன் பின் வெளியான படங்களுக்கு அப்படங்களின் நாயகர்களின் ரசிகர்கள் கூட முழுமையாக வரவில்லை. மத்திய அரசு 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த பின் புறநகர் தியேட்டர்கள் முடங்கிப் போயின. புறநகர் பகுதிகளில் தியேட்டருக்கு படம் பார்க்க மாணவர், இளைஞர் வருவதே அரிதாகிப் போய்விட்டது.
பல தியேட்டர்கள் அன்றாட நிர்வாக செலவுகளை செய்யவே வசூல் வருமானம் இன்றி தவித்தன. படங்கள் திரையிட கொடுத்த அட்வான்சுகள் வசூல் இன்றி முடங்கிப் போயின. ரெமோ படத்திற்கு பின் ரீலீஸ் ஆன கொடி, காஷ்மோரா, சிங்கம் - 3, பைரவா போன்ற படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தினவே தவிர தியேட்டர்களின் கஷ்டத்தைப் போக்கவில்லை. இனி தியேட்டர் நடத்தி பிழைப்பு நடத்த முடியாது என்ற விரக்தியின் விளிம்பில் உரிமையாளர்கள் இருந்த நிலையில், பாகுபலி ரிலீஸ் ஆனது.

முதல் பந்தில் சிக்ஸர் அடித்த சந்தோஷம். ஆம் பாகுபலி தொடக்க காட்சிக்கே கூட்டம் அலைமோதியது. தமிழ்நாட்டில் ரஜினிகாந்த், விஜய் இருவர் நடித்த படங்களை மட்டுமே ரசிகர்கள் வயது வித்தியாசமின்றி குழந்தை முதல் பெரியவர்கள் வரை பார்க்க வருவார்கள். அதே மனநிலை, அதே ஆர்வம், வெகுஜன மக்களிடம் பாகுபலிக்கு இருந்தது.
இந்த சூழல் உடனடியாக உருவானது இல்லை . பிரம்மாண்டமான படத்தை இயக்கும இயக்குநராக மட்டும் ராஜமெளலி இருந்திருந்தால் இது நடந்திருக்காது. கடந்த இரண்டு ஆண்டு காலமாக பாகுபலி படம் பற்றிய எதிர்பார்ப்பை பொது விவாதத்திற்கு உள்ளாக்கியிருந்தது படக்குழு.
'பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்னாரு" இந்த ஒற்றை வரியை உலகம் முழுக்க உள்ள இந்தியர்கள் மத்தியில் பட புரமோஷன் டீம் கொண்டு சேர்த்தது. அதனுடைய ரிசல்ட் முதல் நாள் முதல் காட்சியில் தெரிந்தது. பண்டிகை நாளில் வந்த வேதாளம் படத்துக்கு முதல்நாள் தமிழ் நாட்டில் என்ன வசூல் ஆனதோ அதே தொகை சாதாரண நாளில் ரீலீஸ் ஆன பாகுபலி படத்திற்கு வசூலாகியிருக்கிறது.
முதல் நான்கு நாட்கள் தமிழ் நாட்டில் 48 கோடியை மொத்த வசூலாகப் பெற்று வரலாறு படைத்திருக்கிறது பாகுபலி. இந்த வெற்றி தனிப்பட்ட கதாநாயனுக்காக கிடைத்தது அல்ல. படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் பாகுபலி படம் பற்றி புரமோஷன் வேலைகளை குழு அமைத்து தொடங்கியது தயாரிப்பு தரப்பு ராஜமெளலி கூறுவது போல இந்த வெற்றி ஒட்டுமொத்த குழுவுக்கு கிடைத்த வெற்றி. இதுவரை தமிழ் நாட்டில் மொத்த வசூலில ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படம்தான் உள்ளது (கபாலி இதை விட அதிகம் வசூலித்தாகக் கூறப்பட்டாலும், அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை). எந்திரன் வசூலை பாகுபலி எட்டும் என வியாபார வட்டாரம் நம்புகிறது. எந்திரன் வசூல் என்ன? நாளை...
- ராமானுஜம்


Click it and Unblock the Notifications











