திரைத் துளி
"பாபா" படத்தில் பெரியார் பற்றி வரும் பாடல் வரியை நீக்கி விடுவதாக ரஜினிகாந்த் கூறியதைத் தொடர்ந்து இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளப் போவதாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறினார்.
"பாபா" படத்தில் வரும் "ராஜ்ஜியமா இல்லை இமயமா?" என்ற பாடலில்
""கடவுளை மறுத்தவன் நாள்தோறும்
கூறினானே நாத்தீகம்
பகுத்தறிவாளனின் நெஞ்சினிலே
பூத்ததென்ன ஆத்திகம்
அதிசயம் அதிசயம்
பெரியார் தான் ஆனெதென்ன ராஜாஜி..."" என்ற வரிகள் உள்ளன.
கவிஞர் வாலி எழுதிய இந்தப் பாடலை எதிர்த்து திராவிடர் கழகம் வழக்கு தொடர்ந்தது.
இது தொடர்பாகத் தன்னடைய "விடுதலை" பத்திரிக்கையில் கட்டுரை வெளியிட்ட பிறகும் ரஜினி தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலும் வராததால் தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக திராவிடர் கழகம் கூறியது.
இந்த வழக்கு நாளை (திங்கள்கிழமை) விசாரணைக்கு வரவிருந்த நிலையில் இந்தப் பாடல் வரிகளை நீக்கிவிடத் தயார் என்று திராவிடர் கழக வழக்கறிஞர் அருள்மொழியிடம் ரஜினிகாந்த்தின் வழக்கறிஞர் நேற்று மாலை தெரிவித்து விட்டார்.
மேலும் ஹைதராபாத்தில் இருக்கும் ரஜினி டெலிபோனில் வீரமணியை நேரடியாகத் தொடர்பு கொண்டு நேற்று மாலை பேசினார்.
பெரியாரைக் குறித்து வரும் வரிகளை நாங்கள் நீக்கி விடுகிறோம். எனக்கு எந்தவிதமான கெட்ட நோக்கமும் இல்லை. வழக்கு எல்லாம் தேவையில்லை என்று அப்போது தன்னிடம் ரஜினி கேட்டுக் கொண்டதாக வீரமணி கூறியுள்ளார்.
வழக்குக்கு வேலை வைக்காமல் தாங்களே முன்வந்து பெருந்தன்மையுடன் சம்பந்தப்பட்ட வரிகளை நீக்க முன் வந்ததற்காக உங்களைப் பாராட்டுகிறேன் என்று வீரமணி பதிலுக்கு ரஜினியிடம் கூறினார்.
இதையடுத்து ரஜினியின் அதிகாரப்பூர்வமான கடிதம் ஒன்றம் வீரமணியிடம் நேரில் வந்து கொடுக்கப்பட்டது. ரஜினி சார்பாக "பாபா" படத்தின் தயாரிப்பு நிர்வாகியான வி.ஏ. துரை இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.
இதையடுத்து வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக வீரமணி நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications