பாகுபலி ஒரு காவியப் படைப்பு... பாராட்டிய ஷங்கர்... நன்றி சொன்ன ராஜமவுலி!
பாகுபலி ஒரு காவியப் படைப்பு என்று புகழ்ந்துள்ள இயக்குநர் ஷங்கர், அதைப் படைத்த எஸ்எஸ் ராஜமவுலி மற்றும் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பேசப்பட்டு வரும் படமாகியுள்ளது ‘பாகுபலி'.
படத்திற்கு பல ஹாலிவுட் டிவி சேனல்கள் பாராட்டுகளை தெரிவித்ததோடு ஹாலிவுட்டில் ரீமேக் செய்யும் முயற்சி எடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசூல்
இன்னொரு பக்கம் வசூலில் புது சாதனை படைத்து வருகிறது இந்தப் படம். இது வரை ரூ 250 கோடிக்கு மேல் வசூலை அள்ளியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஷங்கர்
இந்நிலையில் தமிழின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் ‘பாகுபலி' படக்குழுவையும் இயக்குநர் ராஜமவுலியையும் வெகுவாக புகழ்ந்துள்ளார்.

காவியப் படைப்பு
'பாகுபலி' காவிய படைப்பு, கவித்துவமான கற்பனை, வலிமையான கதாபாத்திரங்கள், நல்ல ஹீரோயிஸம், ஆச்சர்யமூட்டும் காட்சியமைப்பு, வாழ்த்துகள் ராஜமவுலி டீம் மற்றும் ராஜமவுலி," என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது ஒரு சான்றிதழ்
இதற்கு நன்றி கூறி பதில் ட்வீட் போட்டுள்ளார் ராஜமவுலி. அதில் 'உங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சார். இதை வெறும் பாராட்டாக நான் பார்க்கவில்லை. எனக்கான அங்கீகார சான்றிதழாகவே பார்க்கிறேன்., உங்கள் பாராட்டால் மொத்த குழுவும் மகிழ்ச்சியடைகிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











