குற்றப் பரம்பரை: விஷால், ஆர்யா, அனுஷ்காவுடன் பிரமாண்ட கூட்டணி அமைத்த பாலா!
சென்னை: தாரை தப்பட்டையைத் தொடர்ந்து சரித்திரக் கதையான குற்றப் பரம்பரையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் பாலா.
கரகாட்டக் கலையை மையமாகக் கொண்டு பாலா உருவாக்கி இருக்கும் தாரை தப்பட்டை திரைப்படம் வருகின்ற 14ம் தேதி வெளியாகின்றது.
இதனைத் தொடர்ந்து தனது அடுத்தப் படமாக குற்றப் பரம்பரை கதையை கையில் எடுத்திருக்கிறார் பாலா.

தாரை தப்பட்டை
சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பல நட்சத்திரங்கள் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தாரை தப்பட்டை. கரகாட்டக் கலையை மையமாகக் கொண்டு இப்படத்தை பாலா இயக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் 1௦௦௦ மாவது படமாக உருவாகி இருக்கும் தாரை தப்பட்டை வருகின்ற 14ம் தேதி வெளியாகின்றது.

குற்றப் பரம்பரை
இதனைத் தொடர்ந்து குற்றப் பரம்பரை நாவலை மையமாக வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் பாலா. இயக்குநர் பாரதிராஜா நீண்ட வருடங்கள் முயற்சி செய்தும் இப்படத்தை இயக்க முடியவில்லை. பாரதிராஜாவால் இயக்க முடியாமல் போன குற்றப் பரம்பரை தற்போது பாலா இயக்கத்தில் உருவாகவிருக்கிறது.

நட்சத்திரப் பட்டாளம்
இந்தப் படத்தில் பாலாவின் முந்தைய பட ஹீரோக்களான விஷால், ஆர்யா, அதர்வா இவர்களுடன் இணைந்து ராணா, அரவிந்த் சாமி, அனுஷ்கா மற்றும் மனிஷா கொய்ராலா ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர். பம்பாய் படத்தின் மாபெரும் ஹிட் ஜோடியான அரவிந்த் சாமி - மனிஷா கொய்ராலா இப்படத்தின் மூலம் மீண்டும் இணைவது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்கா
பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற சரித்திரப் படங்களில் நடித்த அனுஷ்காவை படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிக்க வைக்க பாலா திட்டமிட்டிருக்கிறார். ஆனால் பாகுபலி 2 யால் தேதிகளை ஒதுக்கிக் கொடுப்பது அனுஷ்காவிற்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறதாம். இருந்தாலும் பாலா படமென்பதால் எப்படியாவது தனது தேதிகளை ஒதுக்கிக் கொடுக்க அனுஷ்கா முடிவு செய்துவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

தயாரிப்பு
இப்படத்தில் நடிக்கும் நடிக, நடிகையர் விவரம் ஏறக்குறைய உறுதியாகி விட்டதால் அடுத்தபடியாக படத்தைத் தயாரிப்பது யார்? என்ற பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. பெரும் பொருட்செலவில் தயாராகும் படமென்பதால் லைக்கா மற்றும் ஏ.ஜி.எஸ் நிறுவனங்களிடம் பாலா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறுகின்றனர்.

அன்புக் கட்டளை
இந்தப் படத்தில் நடிக்கும் நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் யாரும் குற்றப் பரம்பரை கதையை படிக்க வேண்டாம் என்று இயக்குநர் பாலா படக்குழுவினருக்கு அன்பாக கட்டளையிட்டு இருக்கிறாராம்.

ஜூலை முதல்
தற்போதைய நிலவரப்படி குற்றப் பரம்பரை படப்பிடிப்பை ஜூலையில் இருந்து தொடங்க பாலா முடிவு செய்திருக்கிறாராம். தயாரிப்பாளர் உறுதியானவுடன் இப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதிராஜா vs பாலா
பாரதிராஜா எவ்வளவோ முயற்சிகள் செய்தும் முடியாத விஷயத்தை தற்போது பாலா சாதித்து விட்டார் என்று கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் சர்ச்சையான குற்றப் பரம்பரை கதையை பாலா கையில் எடுத்திருப்பதை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











