திரைத் துளி
சென்னை:
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவுள்ள எழுத்தாளர் தேவிபாலாவை வாழ்த்துவதற்கு பல எழுத்தாளர்கள் வந்திருப்பது அவரது நல்ல குணத்தைப்பிரதிபலிக்கிறது என்று தேவிபாலாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பாலச்சந்தர் கூறினார்.
தமிழகத்தில் அதிக நாவல்கள் எழுதியதற்காக தேவிபாலாவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவுள்ளது. இதையொட்டி அவருக்கு சென்னைகாமராஜர் அரங்கில் பாராட்டு விழா நடந்தது.
விழாவை தலைமை தாங்கி நடத்தி வைத்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் பேசுகையில், எழுத்தாளர் தேவிபாலாவின் அனைத்து கதைகளையும் படித்துவிடுபவன் நான். நான் அவரது எழுத்தை ரசிப்பவன். அதேபோல, எனது படங்களைப் பார்த்து துல்லியமாக விமர்சிப்பவர் தேவிபாலா.
தொலைக் காட்சித் தொடர்களுக்கான கதை, வசனம் மற்றும் அதிக நாவல்களை எழுதியதற்காக அவரது பெயர் விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவிருக்கிறது. இதைக் கேள்விப்பட்டதும் நான் மிகவும் பரவசமடைகிறேன்.
தேவிபாலா போன்ற நல்ல பண்பான எழுத்தாளர்கள், உழைப்பாளர்கள் தமிழகத்திற்கு மிகவும் அவசியம் என்று பாராட்டிப் பேசினார் பாலச்சந்தர்.
விழாவில் இயக்குநர் திரிலோகச்சந்தர், எழுத்தாளர் சிவசங்கரி, தயாரிப்பாளர் ஏ.வி.எம் குமரன், சரவணன், பத்திரிக்கையாளர்கள் லேனா தமிழ்வாணன்,ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுரேஷ் பாலா, இந்திரா செளந்தர்ராஜன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











