மெரினா பீச்சில் சினிமா ஷூட்டிங் இனி கட் - நிரந்தர தடை அறிவிப்பு
சென்னை : தமிழ் சினிமாவின் முக்கியமான ஷூட்டிங் ஸ்பாட்களில் ஒன்று உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனா பீச். இதுவரை பெரும்பாலான காதல் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டிருக்கின்றன.
தற்போது சினிமா படப்பிடிப்பு நடத்த அரசு பல கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. சென்னை நகரின் முக்கியமான பகுதிகளில் பகலில் படப்பிடிப்பு நடத்த ஏற்கெனவே தடை உள்ளது.
அதனாலேயே பல இயக்குநர்கள் அவுட்டோர் ஷூட்டிங் அல்லது ஸ்டூடியோவில் செட் அமைத்து படமாக்குவதே எளிதான வேலை என முடிவு செய்கின்றனர்.

ஷூட்டிங் தடை
சென்னையின் முக்கியமான இடங்களில் ஏற்கெனவே ஷூட்டிங் நடத்த தடை உள்ளது. இந்த நிலையில் தற்போது சென்னை மெரினா பீச் முதல் பெசன்ட் நகர் பீச் வரை எந்தப் படப்பிடிப்பும் நடத்த முடியாது என்று நிரந்தரத் தடை விதித்துள்ளது தமிழக அரசு.

செய்திக் குறிப்பு
இதுகுறித்து தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'சென்னையில் மெரீனா பீச் முதல் பெசன்ட் நகர் பீச் ரோடு வரையில் இனி படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது' என்று தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டம்
மெரீனாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு மெரீனா கடற்கரையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசும், காவல் துறையும் எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதிதான் இந்த அறிவிப்பும் என்று கூறப்படுகிறது. இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருதப்படுகிறது.

லவ் சீன்
இனி கடற்கரை காதல் காட்சி எடுக்க வேண்டும் என்றால் திரைத்துறையினர் இ.சி.ஆர் ரோட்டில் இருக்கும் ஹோட்டல்கள், பூங்காக்கள் அருகே உள்ள கடற்கரைக்கோ அல்லது மாமல்லபுரம் கடற்கரைக்கோதான் செல்ல வேண்டும்.

அவ்ளோதானா
இதுவரை தமிழ் சினிமாவில் எண்ணற்ற காட்சிகள் மெரினா பீச்சில் எடுக்கப்பட்டிருக்கின்றன. சென்னைப் பின்னணியில் படம் எடுக்கும் இயக்குநர்கள் மெரினா பீச்சில் ஒரு காட்சியாவது வைத்து விடுவார்கள். 'மெரினா' என முழுக்க முழுக்க இந்தக் கடற்கரையில் இருக்கும் மக்களின் வாழ்வியலை வைத்தே படம் கூட வெளிவந்தது.

தமிழ் சினிமாவும் மெரினாவும்
சென்னையைக் காட்டும்போதே மெரினாவைக் கடக்காமல் எந்தப் படமும் வெளிவந்ததில்லை என்றே சொல்லலாம். அப்படியான வரலாறு மிக்க மெரினா கடற்கரையில் இனி ஷூட்டிங் நடத்த் முடியாது என தடை விதிக்கப்பட்டிருப்பது திரைத்துறையினருக்கு மட்டுமல்ல... தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் சோகமான விஷயம்தான்.


Click it and Unblock the Notifications











