அந்த ஒரு சம்பவத்தால் அதன்பின் பேருந்தில் பயணித்ததேயில்லை... தன் இரண்டே இரண்டு பயணம் பற்றி ஆண்ட்ரியா
சென்னை: பி.4.யூ ஐ.வி.ஒய் என்டர்டைன்மென்ட் மற்றும் இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் அனல் மேலே பனித்துளி.
ஆண்ட்ரியா, ஆதவ் கண்ணதாசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தை கெய்சர் ஆனந்த் இயக்கியிருக்கிறார்.
வரும் நவம்பர் 18 வெள்ளிக்கிழமையன்று இந்தப் படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது.

கதை
டிரைலரை பார்க்கும்போது வன்புணர்வு செய்யப்பட்ட ஒரு பெண்ணை சமுதாயம் எப்படி பார்க்கிறது, வாழ்க்கையை எப்படி அவள் எதிர்கொள்கிறாள் என்ற பின்னணியில் இருக்கும் கதை போல தெரிகிறது. ஆண்ட்ரியா கொடுத்துள்ள ஒரு பேட்டியில், என் தோற்றத்தை வைத்து, நான் நகரத்து மாடர்ன் பெண் என்று நினைக்கிறார்கள். ஆனால், அரக்கோணத்தில் ஒரு சிறிய டவுனில் வளர்ந்து ஒரே ஒரு அறை இருந்த வீடு, பின்னர் இரண்டு அறைகள் இருந்த வீடு, அதன் பின் ஒரு அப்பார்ட்மெண்ட் என்று வாடகைக்கு இருந்து பின்னர் அதே அபார்ட்மெண்ட்டை சொந்தமாக வாங்கி படிப்படியாக வளர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவள்.

திருமண ஆசை
படத்திலும் இசை நிகழ்ச்சிகளிலும் நீங்கள் என்னை பார்ப்பது போல நிஜ வாழ்க்கையில் நான் கிடையாது.
30 வயதிற்கு மேலாகியும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பலரும் கேட்கிறார்கள், என்னுடைய 25 வயதிற்கு மேல் நானும் அப்படி நினைத்ததுண்டு. ஆனால் திருமணம் ஆன நிறைய பேர் சண்டையிட்டு பிரிகிறார்கள். அதே வேளையில் திருமணமாகாத நிறைய பேர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதனால் அதைப் பற்றிய வருத்தம் இல்லாமல் போய்விட்டது என்று வெளிப்படையாக ஆண்ட்ரியா பேசியிருக்கிறார்.

பேருந்து அனுபவம்
ஆண்ட்ரியா இதுவரை இரண்டே இரண்டு முறைதான் பேருந்தில் பயணம் செய்துள்ளாராம். 11 வயது இருக்கும் பொழுது வேளாங்கண்ணிக்கு பேருந்தில் சென்றபோது யாரோ தன் முதுகில் கை வைப்பது போல் இருந்ததாம். திடீரென்று அந்த கை அவரது டி-ஷர்ட் உள்ளே சென்றதும் பயந்து போய் இருக்கையில் சற்று முன்னே சென்று அமர்ந்து கொண்டாராம். அப்போது அப்பா அம்மாவிடம் கூறவில்லை, ஏன் அமைதியாக இருந்தேன் என இன்றுவரை எனக்கு தெரியவில்லை.

நான் பரவாயில்லை
இதேபோல கல்லூரிக்கு ஒரு முறை பேருந்தில் சென்றபோதும் நடந்தது. அன்று முடிவு செய்தேன் இனிமேல் பேருந்தில் செல்லக்கூடாது என்று. பேருந்தில் செல்ல வேண்டாம் என்ற வாய்ப்பு எனக்கு இருந்தது, ஆனால் பல பெண்களுக்கு அப்படி வாய்ப்புகள் அமைவதில்லை. எது நடந்தாலும் அவர்கள் அதே பேருந்தில்தான் மீண்டும் பயணிக்க வேண்டும். கல்லூரியில் படிக்கும்போது பல பெண்கள் வகுப்பறையில் அழுவார்கள். இந்த மாதிரி அத்துமீறல்களை பற்றித்தான் அனல் மேலே பனித்துளி படம் பேசியிருக்கிறது என்று ஆண்ட்ரியா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











