போலீசிடம் மேலும் அவகாசம் கேட்கும் பீப் பாய் அனிருத்!
பீப் பாடல் விவகாரத்தில் நேரில் ஆஜராக மேலும் 15 நாள் காலஅவகாசம் கேட்டு இசையமைப்பாளர் அனிருத் சார்பில் கோவை மாநகர காவல் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பீப் பாடல் விவகாரம் தொடர்பாக ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக அளித்த புகாரின் பேரில், நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவு உள்பட 3 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் கோவை ரேஸ் கோர்ஸ் சாலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டது. இரண்டாவது சம்மன் அனுப்பியபோது, ஜனவரி 2ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அனிருத் சார்பில் அவரது தந்தை ரவி ராகவேந்திராவின் வழக்கறிஞர் செந்தில்குமார் மூலமாக கோவை காவல் நிலையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அந்தக் கடிதத்தில், அனிருத் தற்போது அமெரிக்காவில் இருப்பதால் தமிழகம் வர முடியவில்லை. எனவே அவர் நேரில் ஆஜராவதற்கு 15 நாட்கள் காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே சிம்பு தனக்கு ஜாமீன் அளிக்குமாறு கோரிய மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 5ஆம் தேதிக்குள் அவர் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











