பெண் சமுதாயத்தையே வேதனைப்படுத்திய சிம்பு, அனிருத் மீது நடவடிக்கை தேவை... சென்னை வக்கீல் வழக்கு
சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்பு இசையமைப்பாளர் அனிருத் மீது ஆகியோர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல் ஒருவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுத்திருக்கிறார்.
பீப் பாடல் விவகாரத்தில் நாளுக்குநாள் சிம்பு, அனிருத்திற்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் இந்த வழக்கில் கோவை போலீசார் இருவருக்கும் சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக சொல்லியிருக்கின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் இருவருக்கும் எதிரான புகார்கள் காவல்துறையில் குவிந்து வருகின்றன. இந்நிலையில் சைதாப்பேட்டையைச் சேர்ந்த வக்கீல் காசி என்பவர் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கொன்றைத் தொடுத்திருக்கிறார்.
சைதாப்பேட்டை 9-வது பெருநகர் நீதிமன்றத்தில் இவர் தொடர்ந்திருக்கும் வழக்கில் "பெண்களை அவமானப்படுத்தும் வகையில் சிம்பு, அனிருத் பாடல் அமைந்துள்ளது.
அந்த பாடல் வரிகள் பெண் சமுதாயத்தையே வேதனைப்படுத்தும் வகையில் இடம் பெற்றுள்ளது.பெண்களை போற்றக் கூடிய இத்திருநாட்டில் மிக கொச்சையான வார்த்தைகளால் பாடல் பாடி இசை அமைத்த சிம்பு, அனிருத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு ஒருபாடமாக அமைய வேண்டும்" என்று தனது மனுவில் வக்கீல் காசி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் கோவை போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் தற்போது சென்னை நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











