போதைப் பொருள் விவகாரம்.. மலையாள சினிமாவில் விசாரணையை தொடங்கிய என்சிபி.. நடிகர், நடிகைகள் பகீர்!
கொச்சி: கன்னட சினிமா துறையில் போதைப் பொருள் விவகாரம் எடுத்ததை அடுத்து போலீசார், மலையாள சினிமாவிலும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பெங்களூருவில் தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.
அவர்கள், கன்னட டிவி நடிகை அனிகா, கேரளாவைச் சேர்ந்த ரவீந்திரன், அனூப் முகமது ஆகியோர் என்பது தெரியவந்தது.

நடிகர், நடிகைகள்
அவர்களிடம் இருந்து ஏராளமான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான டிவி நடிகை அனிகாவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொடர்பு இருப்பதும் திரையுலகினர் நடத்தும் பார்ட்டிகளின் போது அனிகா போதை மாத்திரைகளை விற்று வந்ததும் தெரிய வந்தது.

நடிகைகள் கைது
இந்த விவகாரத்தில் சில சினிமா நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் சம்மந்தபட்டு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தது தொடர்பாக, நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.

பரப்பனஅக்ரஹாரா
கைது செய்யப்பட்டுள்ள நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சட்டவிரோதமாக சொத்து சேர்த்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுபற்றி அமலாக்கத் துறையினர் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரிடம் 5 நாட்கள் விசாரணை நடத்தினர்.

மலையாள சினிமா
இதையடுத்து இந்த வழக்கு வருமான வரித்துறைக்குச் சென்றுள்ளது. அவர்கள் இவ்வளவு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக விசாரிக்க உள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அனூப் கொடுத்த தகவலை அடுத்து மலையாள சினிமா உலகிலும் சிலர் சம்பந்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

பினீஷுக்கும் தொடர்பு
கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகனும் நடிகருமான பினீஷுக்கும் அனூப்புக்கும் இருந்த தொடர்பு பற்றிய தகவல் வெளியானதை அடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர். கணக்கில் வராத பணத்தை, போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு அனுப்பியுள்ளார் பினீஷ்.

சினிமா தொடர்புகள்
இதனால், நடிகர் பினிஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அனூப் முகமது, பினீஷின் பினாமி என்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பினிஷ் மற்றும் அனூப்பின் சினிமா தொடர்புகள் பற்றி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதனால் மலையாள சினிமா துறையினர் அதிர்ச்சியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











