ஏர்போர்ட்டில் குற்றவாளியை போன்று நடத்தப்பட்ட பாக்யராஜ்
சென்னை: பாங்காக் சென்ற இடத்தில் தன்னை ஒரு குற்றவாளியை போன்று கருதியதாக இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
நேதாஜி பிரபு, கதை எழுதி தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஒளடதம். இந்த பட விழாவில் இயக்குனர் பாக்யராஜ் கலந்து கொண்டு தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் பற்றி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,

தமிழ்
ஔடதம் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். மேடையில் பேசியவர்கள் தமிழில் கையெழுத்து போடுவது குறித்து பேசினார்கள். தமிழில் கையெழுத்து போடுவதால் என்ன நடக்கப் போகிறது என்று நினைத்து நான் சிரித்துக் கொண்டே இருந்தேன். எங்கு கையெழுத்து போட்டு தமிழை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பவர்கள் வேறு ஆட்கள். ஆனால் அவர்கள் அதை செய்வதே இல்லை.

ஆங்கிலம்
உள்ளூரிலேயே தமிழுக்கு மதிப்பு இல்லை. வேலைக்கு சென்றால் ஆங்கிலம் தெரிந்தால் தான் வேலை கொடுக்கிறார்கள். நான் ஆரம்பத்தில் இருந்தே தமிழில் தான் கையெழுத்து போடுகிறேன். செக்கில் கூட தமிழில் கையெழுத்திடுகிறேன். சீனாவில் 50 பேரில் ஒருவர் ஆங்கிலம் பேசினால் அது பெரிய விஷயம். சீனாவில் உள்ளவர்கள் அந்த மொழி தெரிந்தால் போதும் எந்த உயரிய நிலைக்கும் வரலாம் என்று வைத்திருக்கிறார்கள். அந்த நாடு முன்னேறாமலா உள்ளது?

கம்போடியா
தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ள கடந்த வாரம் கம்போடியா கிளம்பினேன். பாங்காக் விமான நிலையத்தில் இறங்கி வேறொரு விமானத்தில் கம்போடியா செல்ல வேண்டியது. என் பாஸ்போர்ட்டில் சீல் வைக்க பக்கம் இல்லை என்று கூறி என்னை பிடித்துவிட்டார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் பேச வரவில்லை. இந்த பிரச்சனையால் காலை 7 மணிக்கு செல்லும் கம்போடியா விமானத்தை தவறவிட்டேன்.

மொழி பிரச்சனை
பக்கம் இல்லை என்றால் இப்பொழுது என்ன செய்வது என்று கேட்டால் இந்தியாவுக்கு திரும்பிச் செல்லுமாறு கூறினார்கள். இந்த தகவலை என் மனைவிக்கு தெரிவித்தபோது செல்போனில் சார்ஜ் போய்விட்டது. என் சார்ஜர் லக்கேஜில் கம்போடியா சென்றுவிட்டது. இந்தியாவுக்கு டிக்கெட் எடுக்குமாறு மனைவியிடம் கூறியிருந்தேன்.

இந்தியா
விமான நிலைய அதிகாரிகளோ கிரெடிட் கார்டை கொடுங்கள், டிக்கெட் எடுங்க என்றார்கள். நானும் டிக்கெட் எடுத்து, மனைவியும் எடுத்தால் பணம் வீணாகுமே என்று நினைத்து இந்தியாவுக்கு போன் செய்ய வேண்டும் என்றேன். உடனே என்னை குற்றவாளிகளை வைக்கும் அறையில் தங்க வைத்துவிட்டனர்.

விமானம்
அதன் பிறகு செல்போனை சார்ஜ் போட்டு, என் மனைவி டிக்கெட்டை வாட்ஸ்ஆப்பில் அனுப்பியதை காட்டியும் என்னை அந்த குற்றவாளிகள் அறையில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. பின்னர் ஒரு வழியாக விமானத்தில் ஏற அனுமதித்தார்கள். அதுவும் விமான நிலையத்தில் செய்யக் கூடாததை செய்து, எடுத்து வரக் கூடாததை எடுத்து வந்தவர்களை அமர வைக்கும் இடத்தில் கடைசியாக உட்கார வைத்துவிட்டனர். பாஸ்போர்ட்டை என்னிடம் தர மறுத்துவிட்டனர் என்றார் பாக்யராஜ்.


Click it and Unblock the Notifications











