Exclusive - கதையே பண்ணாம பான் இந்தியா ஸ்டாரா கூப்பிட்டா படம் ஓடுமா?.. கூலியை விளாசிய பாக்யராஜ்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த கூலி திரைப்படம் இந்த வருடத்தில் அதிக எதிர்பார்ப்பை சந்தித்த படமாக இருந்தது. ஆனால் படம் படுதோல்வியையே சந்தித்தது. அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜின் மார்க்கெட்டையே தலைகீழாக புரட்டி போட்டது. இந்நிலையில் திரைக்கதை மன்னர் என்று புகழப்படும் பாக்யராஜ் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்திருக்கிறார்.
ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வந்ததும் ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையின் கண்களும் அந்தப் படத்தின் மீதுதான் சென்றது. ஏனெனில் இதற்கு முன்னர் லோகேஷ் செய்த சம்பவம் அப்படி. கார்த்திக்கு கைதி, விஜய்க்கு மாஸ்டர், கமலுக்கு விக்ரம் என தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்திருந்தார். எனவே கூலியில் ரஜினியை வைத்து தரமான சம்பவம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
1000 கோடி ரூபாய் படம்: முக்கியமாக இந்தப் படம்தான் ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கப்போகும் முதல் தமிழ் படமாக இருக்கும் என்றெல்லாம் ஆரூடம் கூறினார்கள். லோகேஷும் கமலுக்கு கொடுத்தது மாதிரி ஒரு ஹிட் படத்தை ரஜினிக்கு கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்து சோஷியல் மீடியாவுக்கெல்லாம் லீவு விட்டு வேலைகளை செய்தார். உச்சக்கட்ட ஆவலோடு படம் பார்க்க சென்றார்கள் ரசிகர்கள்.

பான் இந்தியா நடிகர்கள்: போதாக்குறைக்கு தெலுங்கிலிருந்து நாகார்ஜுனா, கன்னடத்திலிருந்து உபேந்திரா, ஹிந்தியிலிருந்து அமீர் கான் என பான் இந்தியா ஸ்டார்களையும் களமிறக்கியிருந்தார் லோகி. ஆனால் படம் பார்த்த ரசிகர்களோ தலையில் அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தார்கள். படத்தில் ஒன்றுமே இல்லை; பான் இந்தியா ஸ்டார்கள் என்ற ஜிகினாவை வைத்து படத்தை லோகி ஒப்பேத்த பார்த்திருக்கிறார் என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்கள்.
ஆட்டம் கண்ட மார்க்கெட்: படம் படுதோல்வியை சந்தித்தது மட்டுமின்றி லோகேஷ் கனகராஜின் மார்க்கெட்டையே ஆட்டம காண வைத்திருக்கிறது. பலரும் அவரை கடுமையாக ட்ரோல் செய்கிறார்கள்.மேலும் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை இவர் மட்டும் இயக்கிவிடவே கூடாது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை சென்றிருக்கிறது. இந்நிலையில் பிரபல இயக்குநர் பாக்யராஜ் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
பாக்யராஜ் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "இலக்கணத்தை மீற வேண்டுமென்றால் முதலில் இலக்கணத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.அப்போதே பான் இந்தியா படமெல்லாம் வந்துவிட்டன. இப்போது அந்த பெயர் வந்திருக்கிறது அவ்வளவுதான். அந்த ஊரிலிருந்து அவரை கூப்பிட்டால் அந்த ஊர்க்காரர்கள் படம் பார்த்துவிடுவார்கள் என்று நினைத்து ஸ்டார்களை இறக்குகிறார்கள்.
வெளியே சொல்ல முடியுமா?: ஆனால் அவர்களை அழைத்துவந்து அவர்களுக்கான கதாபாத்திரங்களை சரியாக செய்யாமல் போனால் எப்படி. கதையே செய்யாமல் பான் இந்தியா படம் எடுத்தோ, கோடி கோடியாக பட்ஜெட் போட்டோ என்ன பிரயோஜனம். அமீர் கான் கூட சமீபத்தில் கூலி படத்தில் நடித்து தவறு செய்துவிட்டேன் என்று வருத்தப்பட்டார்தானே. அவர் அப்படி சொல்லவில்லை என்று சொல்கிறார்கள். இதை எப்படி வெளியில் சொல்வார்கள். அவர் பெர்சனலாககூட சொல்லியிருக்கலாம் அது லீக்காகியிருக்கலாம்" என்றார்.


Click it and Unblock the Notifications











