காவிரிப் பிரச்சினை: நமக்கே இப்படியிருக்கு.. ரஜினிக்கு எப்படி இருக்கும்?.. பாக்யராஜ்!#cauvery
சென்னை: காவிரி பிரச்சினையால் கர்நாடகாவில் இருந்து வந்து தமிழகத்தில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிக்கு தர்மசங்கடமான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
கிஷோர், லதா ராவ் நடிப்பில் வைகறை பாலன் இயக்கியிருக்கும் புதிய படம் 'கடிகார மனிதர்கள்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரபலங்கள் காவிரி பிரச்சினை குறித்தும் மேடையில் பேசினர்.

முதலில் தயாரிப்பாளர் வி.சி.குகநாதன் பேசுகையில், "கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை பேடர கண்ணப்பா என்ற படத்தில் அறிமுகப்படுத்தியவர் தமிழர் ஏவி.எம். அப்படி இருக்கும்போது ராஜ்குமாரின் மகன்கள் தமிழர்களுக்கு எதிராக செயல்படலாமா? தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்லலாமா?" என கேள்வி எழுப்பினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ், "காவிரி பிரச்சினை குறித்து பேசினாலும் பிரச்சினை, பேசாவிட்டாலும் பிரச்சினை என்ற நிலை உள்ளது. கர்நாடக கலைஞர்கள் என்னவெல்லாம் பேசுறாங்க. செய்றாங்க.. உங்களுக்கு மானம், ரோஷம் இருக்கா.. சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுறீங்களா..?'என்று நம்ம ஆட்களிடம் கேட்கும்போது நாம் என்ன செய்ய முடியும்?
நமக்கே இப்படியிருக்கும் போது கர்நாடகாவில் இருந்து வந்து தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டாரா இருக்கும் ரஜினிக்கு எப்படி இருக்கும். அவருக்கு இது எவ்வளவு பெரிய தர்மசங்கடமான பிரச்சினை. அதனால் இந்த காவிரி நீர் பிரச்சினையை அமைதியாக பேசித் தீர்த்துக் கொள்வதுதான் சரியான வழி" என்றார்.


Click it and Unblock the Notifications











