நீ பெரிய டைரக்டரா வருவடா.. அப்பவே தட்டிக் கொடுத்த என் வாத்தியார்.. பாரதிராஜா
சென்னை: பள்ளிப் பருவ நாடகங்களில், நான் கதாநாயகன் உள்பட பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்ததுடன் வசனம் எழுதி தொகுத்து வழங்கியிருக்கிறேன். என்னுடைய செயல்பாடுகளை உற்றுக் கவனித்த என் ஆசிரியர் வருங்காலத்தில் நீ பெரிய சினிமா இயக்குநராக வருவாய் என்று கூறினார் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி சார்பில், மாணவிகளுக்கான "ஆரம் மித்ரா' கலாசார போட்டிகள் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கின. நிகழ்ச்சியை, இயக்குநர் பாரதிராஜா தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:

என்ன ஆகப் போகிறோம்
எதிர்காலத்தில் நாம் என்னவாகப் போகிறோம் அல்லது எந்தத் துறை நமக்கு சரியாகப் பொருந்தும் என்பதை மாணவப் பருவத்திலேயே சிந்திக்கத் தொடங்க வேண்டும்.

விதையை மனதில் இட வேண்டும்
அதற்கான விதையை மனதில் ஊன்றி, கடின உழைப்பு என்ற உரத்தை இட்டு வளர்க்க வேண்டும். இந்தச் சமுதாயத்தில் திறமையின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்க வேண்டும்.

அழுத்தமாக முத்திரை பதித்த இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜா, எழுத்தாளர் ஜெயகாந்தன் என ஒவ்வொரு சாதனையாளர்களும், தாங்கள் மேற்கொண்ட துறையில் தங்களது முத்திரையை அழுத்தமாக பதித்துள்ளனர். அவர்களின் பெயர்களை சமுதாயம் எதிர்காலத்திலும் உச்சரிக்கும். அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்தால் அந்தப் பட்டியலில் விரைவில் உங்களது பெயரும் இடம்பெறும்.

பெரிய இயக்குநராக வருவாய்
பள்ளிப் பருவ நாடகங்களில், நான் கதாநாயகன் உள்பட பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்ததுடன் வசனம் எழுதி தொகுத்து வழங்கியிருக்கிறேன். என்னுடைய செயல்பாடுகளை உற்றுக் கவனித்த என் ஆசிரியர் வருங்காலத்தில் நீ பெரிய சினிமா இயக்குநராக வருவாய் என்று கூறினார்.

சத்தியமாக எனக்கு அப்போது தெரியாது
அந்த காலக்கட்டங்களில், சினிமா இயக்குநர் என்றால் என்னவென்று கூட எனக்கு சத்தியமாகத் தெரியாது. ஆனால், என் வளர்ச்சிக்கான முதல் விதையை ஊன்றியவர் அவர்தான் என்ற உண்மை பிறகுதான் எனக்குப் புரிந்தது.

ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மாற்றத்தை ஏற்படுத்தும்
எனவே, ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் மாணவர்களால் சமுதாயத்தில் நிச்சயம் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றார் பாரதிராஜா.


Click it and Unblock the Notifications











