தயாரிப்பாளர் சங்கத்துக்கு பாரதிராஜாவின் வேண்டுகோள்!
சென்னை : சமீபத்தில் வெளியான படங்களில் ரசிகர்களின் பாராட்டை அள்ளியதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்த படம் 'குரங்கு பொம்மை'. விதார்த், டெல்னா, பாரதிராஜா, பி.எல்.தேனப்பன் ஆகியோர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் இந்தப் படம் உருவானது.
கடந்த வாரம் வெளியான 'குரங்கு பொம்மை' வெற்றிப்படமாக அமைந்ததில் பத்திரிகையாளர்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது என்ற வகையில் படக் குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அப்போது பேசிய இயக்குநர் பாரதிராஜா, 'ரசிகர்களால் பாராட்டப்பட்டதோடு அவர்களின் ஆதரவினால் அரங்கு நிறைந்த காட்சிகளாக இந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் புதிய படங்கள் வருவதால் குரங்கு பொம்மை படத்தை சில தியேட்டர்களில் இருந்து தூக்கி விட்டார்கள் என்றும், சில தியேட்டர்களில் காட்சிகளைக் குறைத்து விட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.
ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிற ஒரு படத்தை நிறுத்துவது, தூக்குவது அநாகரீகமான செயல். இது போன்ற விஷயங்களில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கவனம் செலுத்த வேண்டும்.' என்று கேட்டுக்கொண்டார்.


Click it and Unblock the Notifications











