காட்டுக்கு போய் செத்துடலாம்னு இருக்கு: பாரதிராஜா உருக்கம்
சென்னை: காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாம் போன்று உள்ளதாக இயக்குனர் இமயம் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
மங்களேஸ்வரன் இயக்கத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மரகதக்காடு. ஜெய்பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது,

கலை
இந்த படத்தின் சில காட்சிகளை பார்த்துவிட்டு நாம் மௌனமாக போவது கலைக்கு செய்கின்ற துரோகம் என்பதால் இது குறித்து பேச வந்துள்ளேன். காலில் விழ வேண்டாம். கை கொடுக்கலாம். கட்டிப்பிடிக்கலாம். அமெரிக்கா, லண்டன், துருக்கியில் நான் படப்பிடிப்பு நடித்தினாலும் என் கிராமம், காடுகள் போன்று எங்கேயும் சுகம் இல்லை. இது ஒரு போதையான விஷயம்.

அடையாளம்
மரகதக்காடை பார்க்கும்போது பேசாமல் அங்கே போய் படுத்துக்கலாமான்னு இருக்கு. என் கிராமம் தொலைந்துவிட்டது. என் கிராமங்கள் தனது அடையாளத்தை தொலைத்துவிட்டன. அதற்கு பெயர் பொருளாதார வளர்ச்சி. நான் பதிவு செய்த கிராமத்தை காணவில்லை. கிராமங்களில் கூரை வீடே இல்லை. கூரை வீட்டில் சுகம் இருந்தது.

ஆர்வம்
காலம் போன காலத்தில் மனிதர்களை விட மரகதக்காடு மாதிரி ஒரு காட்டில் போய் வாழ்ந்து இலைகளோடும், பூக்களோடும், சிறு சிறு பூச்சிகளோடும் பழகி செத்துப் போயிடலாம் என்று ஆர்வம் ஏற்படுகிறது. மங்களேஸ்வரன் ரசித்து ரசித்து படத்தை எடுத்துள்ளார். நான் ரொம்ப பேசக் கூடாது என்று நினைத்தேன் ஆனால் இந்த படம் பேச வைத்துவிட்டது.

சினிமா
ஏழு ஜென்மத்திலும் நான் சினிமாக்காரனாகவே இருக்க வேண்டும். சினிமா கொடுத்த பலத்தில் தான் இளமையாக உள்ளேன். இந்த படத்தின் இயக்குனர் மென்மையான இயற்கை ரசிகன். கமல் ஹாஸன் அழகாக இருந்ததால் தான் சப்பானியாக நடிக்க வைத்தேன். இதுவே நாகேஷை நடிக்க வைத்திருந்தால் ரசிகர்கள் எழுந்து போயிருப்பார்கள். அழகை அழுக்காக காட்டியதால் ஏற்றுக் கொண்டார்கள். படத்தை பிளாக் அன்ட் ஒயிட்டில் எடுக்க நினைத்தபோது நாகேஷை தான் சப்பானியாக போட நினைத்தேன். பின்னர் கலர் படம் என்பதால் கமலை நடிக்க வைத்தேன் என்றார் பாரதிராஜா.


Click it and Unblock the Notifications











