ஒரு வழியாக முடிந்தது பேச்சுவார்த்தை.. புது பட ரிலீஸுக்கு இனி தடையில்லை.. பாரதிராஜா அறிக்கை!
சென்னை: வி.பி.எஃப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளதால், புதிய படங்கள் வெளியீட்டில் நீடித்த சிக்கல் தீர்ந்துள்ளதாக பாரதிராஜா கூறியுள்ளார்.
வி.பி.எஃப் கட்டணப் பிரச்னை காரணமாக தியேட்டர்களில் புது படங்கள் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டது.
ஆனால் நவம்பர் மாதம் மட்டும் வி.பி.எஃப் கட்டணம் தேவையில்லை என்று க்யூப் நிறுவனம் அறிவித்ததால் தீபாவளிக்கு படங்கள் வெளியாகின.

பேச்சுவார்த்தை சுமுகம்
இதற்கிடையே, தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், க்யூப் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா

இனிதே முடிந்துள்ளது
"கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், க்யூப் நிறுவனம், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு இடையே வி.பி.எஃப் கட்டணம் குறித்துப் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அந்தப் பேச்சுவார்த்தை இனிதே முடிந்துள்ளது.

முன்னிலை ஒப்பந்தம்
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், க்யூப் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, க்யூப் நிறுவனம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு தற்போது இருக்கும் கட்டணத்தில் கணிசமான சதவீதத்தைக் குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்துள்ளது.

சுமுகமான முடிவு
31/3/2021 ஆம் தேதிக்குள், இந்த வி.பி.எஃப் பற்றிய ஒரு நிரந்தரத் தீர்வை மூன்று சாரரும் இணைந்து செய்து கொள்ளவும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்பட துறை இந்தக் கொரோனா கால பாதிப்பிலிருந்து மீண்டு வர வேண்டும், புதிய திரைப்படங்கள் வெளியாவதில் எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், மூன்று சாரரும் இந்த சுமுகமான முடிவுக்கு வந்துள்ளனர்.

இனி வெளியாகும்
இதன் மூலம், 31/3/2021 வரை தமிழ் சினிமாவில் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதில் எந்தச் சிக்கலும் இல்லை. அதிக எதிர்பார்ப்பில் உள்ள பல பெரிய பட்ஜெட் படங்களும், நடுத்தர மற்றும் சிறு பட்ஜெட் படங்களும் தடையில்லாமல் இனிமேல் வெளியாகும்.

மனமார்ந்த நன்றி
தமிழ் சினிமா மீண்டு வர எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் தமிழக முதல்வர், துணை முதல்வர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட துறை சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











