இழுத்து மூடப்பட்ட கன்னட பிக் பாஸ் ஸ்டூடியோ.. என்ன காரணம் தெரியுமா?.. இங்கேயும் கவனிப்பாங்களா?
பெங்களூர்: கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (KSPCB), பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் கன்னடத்தின் படப்பிடிப்பு தளத்தை மூட உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிடதி ஹோப்ளியில் உள்ள ஜாலி வுட் ஸ்டுடியோஸ் மற்றும் அட்வென்ச்சர்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள பிக் பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
KSPCB தலைவர் பி.எம். நரேந்திர சுவாமி கூறுகையில், படப்பிடிப்பு தளத்திலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்பட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக தெரிவித்தார். தயாரிப்பு குழு 250 KLD திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (STP) நிறுவியதாக கூறியது. ஆனால், ஆய்வில் அது இயக்கப்படாமல், முறையான உள் வடிகால் இணைப்புகள் இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது.

அதிகாரிகளின் ஆய்வில், கழிவுநீர் எந்தவித சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாக வெளியேற்றப்பட்டது கண்டறியப்பட்டது. இது அப்பகுதி சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. திடக் கழிவு மேலாண்மையிலும் குறைபாடுகள் இருந்தன. பிளாஸ்டிக் கோப்பைகள், காகிதத் தட்டுகள் போன்றவற்றை முறையாகப் பிரிக்கும் முறை அங்கு இல்லை.
கழிவுநீர் மேலாண்மை மற்றும் STP செயல்பாடுகள் குறித்த ஆவணங்களும், விளக்கப்படங்களும் தளத்தில் இல்லை. மேலும், 625 kVA மற்றும் 500 kVA திறன் கொண்ட இரண்டு டீசல் ஜெனரேட்டர் (DG) செட்டுகள் அங்கு காணப்பட்டன. இந்த அடுக்கடுக்கான விதிமீறல்களைக் குறிப்பிட்டு, சுற்றுச்சூழல் விதிமுறைகள் பின்பற்றப்படும் வரை பிக் பாஸ் கன்னட படப்பிடிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, BESCOM மின் விநியோகத்தை துண்டிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் கன்னடம் சீசன் 12 நிகழ்ச்சி நிறுத்தப்படும் நிலையில், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுதொடர்பான செய்தி வேகமாக பரவி வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்த செய்தி ட்வீட்டுக்கு கீழ் பல கோலிவுட் ரசிகர்கள் தமிழ் பிக் பாஸையும் மூட ஏதாவது வழி இருக்கா யுவர் ஹானர் என கேட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது 2வது சீசனுக்கு மேல் நீச்சல் குளம் நீர் மேலாண்மை காரணமாக மூடப்பட்டது. ஆனால், தற்போது டாய்லெட்டில் தண்ணீர் சரியாக வராமல், நீச்சல் குளம், ஜக்குஸி என தண்ணீரை தேவையில்லாமல் போட்டியாளர்கள் வீணடித்து வருவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.
மேலும், போட்டியாளர்களின் பேச்சுக்களும், தேவையற்ற சண்டைகளும், ஆபாச தொனிகளும் தொடர்ந்து ட்ரோல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











