விக்ரமனுக்கு கடைசி நேரத்தில் திருமாவளவன் ஓபன் சப்போர்ட்..அப்போ டைட்டில் இவருக்குத்தானா?
சென்னை : தன்னுடைய அரசியல் அடையாளத்தை எந்த இடத்திலும் மறைக்காமல் செயல்பட்டு வரும் விக்ரமனை நினைத்து பெருமை அடைவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. ஐந்து சீசன்கள் நடந்து முடிந்துள்ள இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது.
ஐந்து சீசன்களை தொகுத்து வழங்கியதைப்போல ஆறாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக சினிமா பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், பாடகர்கள்,செய்திவாசிப்பாளர்கள் மட்டுமே போட்டியாளர்களாக இருப்பார்கள். ஆனால், கடந்த முறை அறிமுகம் இல்லாதவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், நிகழ்ச்சியில் சுவாரசியமே இல்லாமல் போனது. இதனால், இந்த முறை போட்டியாளர்களை கவனத்துடன் தேர்வு செய்தது பிக் பாஸ் டீம்.

சிறப்பான போட்டியாளர்
இதில் அறிமுகம் இல்லாதவர்கள் என்று பார்த்தால் அது தனலட்சுமி,ஷிவின் தான். மற்றபடி அனைவரும் ஓரளவிற்கு தெரிந்த முகங்கள் தான். அதே போல எப்போதும் இல்லாத வகையில் இந்த சீசனில் தான் அரசியல் பிரமுகரான விக்ரமன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவர் வீட்டிற்குள் வந்ததில் இருந்து அனைவருடைய கருத்துக்கும் மதிப்பளித்து விளையாடி வருகிறார்.

மக்களிடம் பெருகும் ஆதரவு
சகபோட்டியாளரான அசீமுடன் அவ்வப்போது சண்டை வந்தபோதும், வார்த்தையை விட்டுவிடாமல் சண்டையிலும், கவனமாக வார்த்தையை பயன்படுத்துகிறார். இதனால் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராகவே விக்ரமன் இருக்கிறார். போட்டியாளர்கள் தொடர்ந்து இவரை நாமினேட் செய்தும் மக்கள் இவரை வாக்களித்து காப்பாற்றி வருகின்றனர்.

அம்பேத்கருக்கு கடிதம்
கடந்த வாரம் நடந்த கடிதம் எழுதும் டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் குடும்ப உறுப்பினர்களை நினைத்து உருகி கடிதம் எழுதிய நிலையில், விக்ரமன் சட்டமேதை அம்பேத்கருக்கு கடிதம் எழுதி போட்டியாளர்களை மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த மக்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். இதை கமல்ஹாசனே நெகிழ்ந்து பாராட்டி இருந்தார்.

பெருமையாக உள்ளது
இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், விக்ரமனை நினைத்து பெருமைப்படுகிறேன். அந்த நிகழ்ச்சியை என்னால் பார்க்க முடியவில்லை, ஆனால், விக்ரமன் பேசியதை தோழர்கள் எனக்கு அனுப்புவார்கள் அதைப்பார்த்து தெரிந்து கொள்வேன். அதேபோல தோழர்கள் அவருக்கு வாக்களித்து வருகிறார்கள் என்றார்.

அப்போ டைட்டில் இவருக்குத்தானா?
மேலும், விக்ரமன் தன் அரசியல் அடையாளத்தை எங்கேயும் மறைக்கவில்லை. நான் ஒரு விசிக, பெரியார், அம்பேத்கர் கருத்துக்களை கொண்டவன் என்பதை அவர் மறைக்கவில்லை. அவ்வாறு அவர் பேசுவது, எனக்கு பெருமையாக மகிழ்ச்சியாக உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார். இவரின் பேட்டி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விக்ரமனுக்கு கடைசி நேரத்தில் திருமாவளவன் ஓபன் சப்போர்ட் பண்ணிவிட்டார் என்றும் அப்போ டைட்டில் வின்னர் விக்ரமன் தான் என்றும் இணையத்தில் கருத்துக்கள் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











