கலைவாணி முதல் வாணி ஜெயராம் வரை... ஏழு ஸ்வரங்களின் கான சரவஸ்வதியின் இசைப் பயணம்!
சென்னை: இந்திய திரையுலகின் லிஜெண்ட்ரி பாடகராக வலம் வந்தவர் வாணி ஜெயராம்.
நான்கு தலைமுறையாக இசைத் துறையில் சாதனை படைத்து வரும் வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் தான் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வாணி ஜெயராம் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் பாடி சாத்னை படைத்த வாணி ஜெயராமின் வாழ்க்கை வரலாற்றை தற்போது பார்க்கலாம்.

கலைவாணி முதல் வாணி ஜெயராம்
1945 நவம்பர் 30ம் தேதி வேலூரில் கலைவாணி என்கிற வாணி ஜெயராம் பிறந்தார். கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார், டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்நாடக இசையைப் பயின்ற வாணி ஜெயராமுக்கு லதா மங்கேஷ்கர், முகம்மது ரபி ஆகியோரது பாடல்களைக் கேட்டு திரைப்படங்களில் பாடவேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது. பின்னர் சென்னையில் உள்ள ராணி மேரிக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். பாரத ஸ்டேட் வங்கியில் வேலை கிடைத்தது. திருமணத்துக்குப் பிறகு மும்பையில் வசித்த வாணி ஜெயராமின் இசை ஆர்வத்தை பார்த்த அவரது கணவர், உஸ்தாத் அஹ்மத் கானிடம் முறையாக ஹிந்துஸ்தானி இசை பயில ஏற்பாடு செய்தார். அப்போது இவரது திறமையை அடையாளம் கண்டுகொண்டது இந்தி திரையுலகம்.

1971ல் பாடகியாக அறிமுகம்
1971ம் ஆண்டு இந்தியில் வெளிவந்த 'குட்டி' படத்தில், வசந்த் தேசாயின் இசை அமைப்பில் 'போலே ரே பப்பி ஹரா' என்ற 'மியான் மல்ஹார்' ராகப் பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். 1974ல் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் ரிலீஸான தீர்க்க சுமங்கலி படத்தில் 'மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ' என்ற பாடலை பாடி அசத்தியிருந்தார் வாணி ஜெயராம். இந்தப் படத்திற்கு முன்னர் 1973ல் 'வீட்டுக்கு வந்த மருமகள்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்' ஆகிய படங்களில் வாணி ஜெயராம் பாடி இருந்தாலும் 'தீர்க்க சுமங்கலி' தான் அவரை மக்களிடம் கொண்டு சேர்த்த்தது. பாடகியாக பிஸியாக வலம் வரத் தொடங்கியதால். வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு பாடல்கள் பாடுவதில் ஆர்வம் காட்டினார்.

நான்கு தலைமுறை பாடகி
இன்று ரசிகர்களால் வாணி அம்மா என்று அழைக்கப்படும் அவரது திரையிசைப் பயணம் பல சாதனைகளை உள்ளடக்கியது. ஏனெனில் அவர் பாடாத இந்திய மொழியே இல்லை எனலாம். அதேபோல் மதங்களைக் கடந்து பக்திப் பாடல்களையும் தனி ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார். சுமார் 50 ஆண்டுகளாக நான்கு தலைமுறை நடிகைகளுக்கு அவர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. 'ஏழு ஸ்வரங்களுக்குள்', 'மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க', 'முத்தமிழில் பாடவந்தேன்' என அவர் பாடிய பாடல்களில் நயமும் இனிமையும் கைகோத்துக்கொண்டிருக்கும். இவற்றுக்கெல்லாம் அடிநாதமாக ஒரு தெய்விகத் தன்மை குரலில் இழைந்தோடும். வாணி பாடும் சிறப்பம்சமே பாடல்களின் இடையில் அவர் வெளிப்படுத்தும் சங்கதிகள் தான்.

தேசிய விருதுகள்
அபூர்வ ராகங்கள் படத்தில் இடம்பெற்ற ஏழு ஸ்வரங்களுக்குள், சங்கராபரணம் படத்தில் இடம்பெற்ற மானஸ ஸஞ்சரரே, ஸ்ருதிலயாலு தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம் ஆகிய பாடல்களுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றவர். புனித அந்தோனியார் படத்தில் மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார், பி. சுசீலாவுடன் இணைந்து பாத பூஜை படத்தில் கண்ணாடி அம்மா உன் இதயம், அந்தமான் காதலி-யில் நினைவாலே சிலை செய்து, சினிமாப் பைத்தியம் படத்தில் என் உள்ளம் அழகான வெள்ளித்திரை, தங்கப்பதக்கத்தில் தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு, பாலாபிஷேகத்தில் ஆலமரத்துக் கிளி எனக் கேட்டதுமே இதயத்துள் ஈரம் படச் செய்யும் குரலினிமையுடன் அவர் பாடிய பாடல்களின் பட்டியல் மிகப் பெரிது.

கையில் கிடைக்காத பத்ம பூஷன்
பத்தாயிரத்துக்கும் அதிகமான் பாடல்களைப் பாடி இந்திய திரையிசை உலகில் ஒரு சகாப்தமாக விளங்கியவர் வாணி ஜெயராம். இவரது இசை சாதனையை பாராட்டி கடந்த மாதம் கொண்டாடப்பட்ட குடியரசு தினத்தில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அதனை பெற்றுக்கொள்ளும் முன்னரே வாணி ஜெயராம் உயிரிழந்தது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை வென்றுள்ள வாணி ஜெயராம் மறைவு திரையுலகிற்கு பெரும் இழப்பு என பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











