’அங்கூர் அரோரா மர்டர் கேஸ்’ படத்தின் மீது கேஸ் போட்ட பிரபல ’பிஸ்கட்’ நிறுவனம்
மும்பை: 'அங்கூர் அரோரா மர்டர் கேஸ்' படத்தில் தங்களது பிஸ்கட் கம்பெனியை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி, கம்பெனி சார்பில் படத்தயாரிப்பாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல பரிணாமத்தில் இந்தி திரையுலகத்தில் புகழ் பெற்றவர் விக்ரம் பட். இதுவரை இவரது இயக்கத்தில் 25 படங்களுக்கும் மேல் வெளிவந்துள்ளது. சமீபத்தில் விக்ரம்பட்டின் தயாரிப்பு நிறுவனமான ஏஎஸ்ஏ புரொடக்ஷன் சார்பில் 'அங்கூர் அரோரா மர்டர் கேஸ்' என்ற புதிய படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

முக்கியக்காட்சியில்...
இப் படத்தின் முக்கிய காட்சி ஒன்றில் சிறுவன் ஒருவன் அறுவை சிகிச்சையின் போது உயிரிழப்பதாக வருகிறது. அக்காட்சியில், சிறுவனுக்கு அருகில் ஒரு பிஸ்கட் பாக்கெட் இருப்பதுபோல் காட்சி வைக்கப்பட்டுள்ளது.

வன்மையாகக் கண்டிக்கிறோம்....
இதை வன்மையாக கண்டித்துள்ள பிஸ்கட் நிறுவனம், 'சிறுவன் சாப்பிட்டதாகக் காட்டப்படும் பிஸ்கட் எங்கள் நிறுவனத் தயாரிப்பு போல் காட்டப் பட்டுள்ளது. இது எங்களுடைய இத்தனை வருட உழைப்பையும், எங்கள் கம்பெனி பெயரையும் பாழ் படுத்தும் செயல் ஆகும். மேலும், எங்கள் அனுமதியை பெறாமல் எங்கள் தயாரிப்பை பயன் படுத்தியது அத்துமீறிய செயலாகும்' எனக் குற்றம் சாட்டியுள்ளது.

நிபந்தனையற்ற மன்னிப்பு...
சட்டப்படி, இத்தகைய குற்றங்களுக்கு மூன்று வருட சிறைத்தண்டனை அல்லது தலா இரண்டு லட்ச ரூபாய் அபராதமாக கட்ட வேண்டியிருக்கும். ஆனால், பிஸ்கட் நிறுவன உரிமையாளர் ஒரு கோடி நஷ்ட ஈடும், நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டு வழக்கு தொடுத்தார். அத்தோடு, இனி தங்களுடைய எந்த தயாரிப்பையும் தயாரிப்பாளர் தனது படத்தில் காட்டக் கூடாது என நிபந்தனையும் விதித்துள்ளார்.

இது உங்களுக்குத் தான் ஆதாயம்...
இது குறித்து விக்ரம் பட் தரப்பில் தரப்பட்டுள்ள விளக்கத்தில், ‘சிறுவன், சிகிச்சையில் ஏற்பட்ட தவறினால்தான் உயிரிழப்பதாகக் காட்டப்பட்டுள்ளதே தவிர பிஸ்கட் சாப்பிடுவதால் அல்ல. மேலும், இத்தகைய இலவச விளம்பரம், பிஸ்கட் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆதாயங்களைதான் பெற்றுத் தரும்' என தெரிவித்துள்ளார். எனினும் பிரச்சினையை தவிர்ப்பதற்காக, உடனடியாக சம்பந்தப்பட்ட காட்சியில் இருந்து பிஸ்கட் நிறுவனத்தின் பெயரை மறைப்பதாக உறுதி அளித்துள்ளார்.

வழக்கு வாபஸ்....
இதனால் சமரசத்திற்கு வந்த பிஸ்கட் நிறுவனம் வழக்கை வாபஸ் பெறுவதற்கு முன் வந்துள்ளனர். இத்தகவலையும் விக்ரம் பட் தான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











