பைசன் படத்தை எதிர்த்த ஹரி நாடார்.. களத்தில் குதித்த பிரபலம்.. வேல்யூ பாயிண்ட்டா எடுத்து வைக்கிறாரே
சென்னை: மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகியிருக்கும் பைசன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. வசூலிலும், விமர்சனத்திலும் டாப் கியரில் சென்றுகொண்டிருக்கும் படத்துக்கு தியேட்டர்களில் கூட்டம் அதிகமாகிவருகிறது. இப்படிப்பட்ட சூழலில் இந்தப் படத்துக்கு ஹரி நாடார் எதிர்ப்பு தெரிவித்து மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி இதுகுறித்து பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் மட்டுமில்லை இந்திய சினிமாவிலேயே கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் திரைப்படத்தை பார்த்துவிட்டு அவரை பாராட்டாதவர்களே இருக்க முடியாது. இயக்குநர் இமயம் பாரதிராஜாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார். அடுத்தடுத்து வெளியான மாரியின் படங்கள் கோலிவுட்டில் முக்கியமான படங்கள் என்ற லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டன. இதனால் அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்று நடிகர்களிடம் ஆசை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது.
பைசன் - காளமாடன்: அந்த ஆசைதான் துருவ் விக்ரமுக்கும் வந்தது. அவர் நடித்த முதல் இரண்டு படங்களும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. எனவே மாரியின் இயக்கத்தில் பைசன் படத்தில் நடிக்க கமிட்டானார். இப்படத்துக்காக இரண்டு வருடங்கள் கபடி வீரர் மணத்தி கணேசனிடம் கபடி பயிற்சி பெற்று; தென் மாவட்ட இளைஞர்களின் உடல்மொழியையும், வாழ்வியலையும் கற்றுக்கொண்டார். முழுதாக தன்னை மாரியிடம் ஒப்படைத்தார் துருவ். படமானது நேற்று முன்தினம் வெளியானது.

அட்டகாசமான படம்: படத்துக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. முக்கியமாக ஒடுக்கப்பட்ட சாதியினரின் வலியையும், ஆதிக்க சாதி மனப்பான்மை உடையவர்களின் குரூர் எண்ணத்தையும் தனது படைப்புகளில் தொடர்ந்து பதிவிட்டுவந்த மாரி; இந்தப் படத்தில் சொந்த சாதிக்குள்ளேயே இருக்கும் சாதி வெறியர்களை தலைவர் அந்தஸ்தில் இருப்பவர்கள் எப்படி கையாள்கிறார்கள், சாதி பாகுபாடு பார்க்காமல் அவர்கள் எப்படி திறமையாளர் ஒருவரை ஊக்குவிக்கிறார்கள் போன்ற பாசிட்டிவ் பக்கத்தை காட்டியிருந்தார்.
துருவ்வுக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ்: திரைக்கு பின்னால் மாரி இப்படி தரமான சம்பவங்கள் செய்ய; திரையில் துருவ் விக்ரம் அடித்து ஆடியிருக்கிறார். தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் அவருக்கு பெரிய அடையாளத்தை இப்படம் கொடுத்திருக்கிறது. விமர்சன ரீதியாக கொண்டாடப்படும் இப்படம் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டுவருகிறது. இரண்டு நாட்களில் ஆறு கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தெரிகிறது.
ஹரி நாடார் எதிர்ப்பு: இது ஒருபக்கம் இருக்க வழக்கம்போல் மாரி செல்வராஜின் இந்தப் படத்தையும் ஒருதரப்பினர் எதிர்க்க ஆரம்பித்துள்ளார்கள். சத்ரிய சன்றோர் படை என்ற கட்சியின் தலைவர் ஹரி நாடார், 'மாரி செல்வராஜ் சாதி கலவரத்தை தூண்டும் வகையில் படம் எடுக்கிறார். எனவே அவரை கைது செய்ய வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்.
பிஸ்மி பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பைசன் திரைப்படம் உண்மையிலேயே நன்றாக இருக்கிறது. இது சாதிய படமெல்லாம் இல்லை. துருவ் விக்ரம் அருமையாக நடித்திருக்கிறார். இயக்குநர் மாரி செல்வராஜ் சாதி கலவரத்தை தூண்டுகிறார் என்றெல்லாம் சிலர் கூறுகிறார்கள். இன்றுகூட ஒரு கட்சியினர் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதெல்லாம் தேவையில்லாத வேலை. சாதி பெருமை பேசும் படங்களும் வந்திருக்கின்றன. ஆனால் மாரி செல்வராஜ் இந்த சாதியில் தான் பிறந்ததால் சந்தித்த வலியையும், அவமானத்தையும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று படம் எடுக்கிறார். சாதி பெருமை பேசும் படங்களுக்கும், சாதியால் பட்ட வலிகளை சொல்லும் படங்களுக்கு நிறைய வித்தியாசம் இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











