TVK - தலைமறைவு வாழ்க்கை கழகம்.. விஜய் கட்சிக்கு புது அர்த்தம் கொடுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர் விஜய் ஜன நாயகன் படத்துடன் இனிமேல் சினிமாவுக்கு குட் பை என சொல்லிவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து அதன் தலைவராக மாறினார். மாநாடு, வாரம் ஒரு மாவட்டத்துக்கு சனிக்கிழமை அன்று செல்வது என மாஸ் காட்டி வந்தார்.
ஆனால், விஜய்யை பார்க்க ஒவ்வொரு முறையும் கட்டுக்கடங்காத கூட்டம் கூடுவதை தவெக கட்சியோ விஜய்யோ சுதாரிக்காத நிலையில், கரூரில் கடந்த மாதம் செப்டம்பர் 27ம் தேதி சனிக்கிழமை விஜய் மக்களை சந்தித்த போது, நள்ளிரவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அங்கிருந்து அவசர அவசரமாக திருச்சிக்கு சென்று தனி விமானம் மூலம் விஜய் சென்னைக்கு வந்து பாதுகாப்பாக பனையூரில் பதுங்கி இருக்காமல், அங்கேயே கைது செய்தால் கூட பரவாயில்லை என மக்களுக்காக உதவி இருந்தால் இந்நேரம் இப்படியெல்லாம் அவரையும் அவரது கட்சியையும் யாரும் ட்ரோல் செய்திருக்க மாட்டார்கள் என ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார்.
வீடியோ கால் மூலம் ஆறுதல்: கரூரில் சொந்தங்களை பறிகொடுத்து மீளாத் துயரில் முடங்கிக் கிடக்கும் குடும்பத்தினர் சிலரிடம் வீடியோ கால் மூலம் விஜய் ஆறுதல் கூறினார். மேலும், தவெக கட்சி சார்பில் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது. தனக்கு கரூர் வர அனுமதி கிடைக்கவில்லை என்றும் கோர்ட்டில் வழக்கு ஓடிக் கொண்டிருக்கிறது என்று கூறிய விஜய் விரைவில் கரூர் வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதாக கூறினார்.
தலைமறைவு வாழ்க்கை கழகம்: தவெக தலைவராக மாறிய விஜய் தான் கரூர் துயரத்துக்கு காரணம் என்று பலரும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவரது கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் இதுவரை தலைமறைவாகவே உள்ளார் என்றும் ஆதவ் அர்ஜுனா விளையாடுவதற்காக வெளிமாநிலத்துக்கு சென்றுள்ளார் என்றும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், விஜய்யின் தவெக கட்சியை தலைமறைவு வாழ்க்கை கழகம் என பெயர் மாற்றி விளாசி எடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில்,
"கரூரிலோ அல்லது திருச்சியிலோ தங்கி.. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லி இருக்கலாம்.
* அனுமதி தரவில்லை என்பதை அங்கிருந்தே ஊடகங்கள் மூலம் பேட்டி தந்திருக்கலாம்.
* சென்னை வந்ததும்.. வீடியோ காலாவது செய்திருக்கலாம்.
* தாமதம்.. அதற்கான விலையை தந்து கொண்டிருக்கிறது." என ப்ளூ சட்டை மாறன் ஜன நாயகன் மீது சாட்டையை சுழற்றியுள்ளார்.
ஜன நாயகன் ஷூட்டிங்: நக்கீரன் கோபால் விஜய்யின் ஜன நாயகன் ஷூட்டிங்கே விஜய் சனிக்கிழமைகளில் மக்களை சந்திக்கும் போது எடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த காட்சிகள் ஜன நாயகன் படத்தில் இடம்பெற போவதாகவும் பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆவதே சிக்கல் என்றும் ரிலீஸ் ஆனால் கூட மக்கள் எந்தளவுக்கு விஜய் படத்துக்கு ஆதரவு தருவார்கள் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications











