காந்தாரா படத்துக்கு ராம்கோபால் வர்மா கொடுத்த சர்டிபிகேட்... பிரம்மாண்ட இயக்குநர்களுக்கு நோஸ்கட்
பெங்களூரு: கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி நடித்துள்ள 'காந்தாரா' திரைப்படம் கடந்த மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே ஹீரோவாக நடித்துள்ள 'காந்தாரா' படத்திற்கு, ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ள 'காந்தாரா' படம் குறித்து பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

காந்தாரா பாக்ஸ் ஆபிஸ்
கன்னட திரையுலகில் அடுத்தடுத்து தரமான திரைப்படங்கள் வெளியாகி, சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இப்போது ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா' படம் தான் டாக் ஆஃப் தி சினிமா இண்டஸ்ட்ரியாக உள்ளது. கடந்த மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கன்னடத்தை தொடர்ந்து தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்தப் படம் இதுவரை 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடரும் வரவேற்பு
கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் தான் காந்தாராவையும் தயாரித்துள்ளது. ரிஷப் ஷெட்டியுடன் மானஸி, கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படம், காட்டில் வாழும் ஆதிகுடிகளின் தொன்ம கதைகளின் பின்னணியில் உருவாகியுள்ளது. வனத்துறையினருக்கும் காட்டுப் பகுதிகளில் வாழும் பூர்வகுடிகளுக்கும் இடையே நடக்கும் பிரச்சினையை ஆழமாக பேசியுள்ளார் ரிஷப் ஷெட்டி. இதுவரை 100 கோடி வசூலித்துள்ள காந்தாரா படத்திற்கு, ரசிகர்களிடம் தொடர்ந்து ஆதாரவு கிடைத்து வருகிறது.

ராம்கோபால் வர்மா ட்வீட்
காந்தாரா படத்தை பார்த்த நடிகர் கார்த்தி, ரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும், பல முன்னணி நட்சத்திரங்களும் இந்தப் படத்தை பாராட்டியிருந்தனர். இந்நிலையில், பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா காந்தாரா படம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "அதிக பட்ஜெட் படங்கள்தான் ரசிகர்களை தியேட்டருக்கு வரவைக்கும் என்ற மூட நம்பிக்கையை ரிஷப் ஷெட்டி உடைத்துவிட்டார். காந்தாரா மிகப்பெரிய பாடம்" என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

பிரம்மாண்ட இயக்குநர்களுக்கு நோஸ்கட்
மேலும், காந்தாரா படத்தின் கலெக்ஷன் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும். அதனால், 200 கோடி, 300 கோடி, 500 கோடி போன்ற பிரம்மாண்டமான பட்ஜெட் இயக்குநர்களுக்கு ஹார்ட் அட்டாக் தான் வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒரு படம் எப்படி எடுக்கலாம் என பாடம் சொல்லிக்கொடுத்த ரிஷப் ஷெட்டிக்கு, திரையுலகினர் ட்யூஷன் ஃபீஸ் தான் கொடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். 'காந்தாரா' படத்தின் இறுதி 20 நிமிடக் காட்சிகளை பலரும் பிரமிப்புடன் பாராட்டி வரும் நிலையில், ராம்கோபால் வர்மாவின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது. இந்தப் படம் மொத்தமே 20 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கத்து.


Click it and Unblock the Notifications











