இலங்கையில் பாலிவுட் தொழில்நுட்பக் குழு
கொழும்பு: என்னதான் தமிழ் உணர்வாளர்களும் தென்னிந்திய திரைத்துறையும் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவுக்கான ஏற்பாடுகள் கொழும்பில் மும்முரமாக நடக்கின்றன.
வரும் ஜூன் 2 ம் தேதி துவங்கும் இந்த விழாவுக்கு சுகததாச உள் விளையாட்டு அரங்கின் அலங்கார வேலைகளுக்காக 50 தொழில் நுட்பப் பணியாளர்கள் மும்பைலிருந்து கொழும்பு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பு விமானத்தின் மூலம் அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்ததாக விழா ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் சுமார் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் வரவிருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
அத்துடன் கொழும்பின் பல்வேறு பகுதிகளில் இந்தியத் திரைப்பட விருது விழா தொடர்பான அலங்காரப் பணிகளை கொழும்பு மாநகரசபை மேற்கொண்டுள்ளது.
திரைப்பட விருது வழங்கும் விழாவின் ஆரம்ப நிகழ்ச்சி பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும், நட்புறவு கிரிக்கெட் சுற்றுப்போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்திலும் விருது வழங்கும் விழா சுகததாஸ உள்ளக அரங்கிலும் நடைபெறவிருக்கின்றன.
இறுதி நாள் விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவிலிருந்து வருகை தரவிருக்கும் திரையுலக நட்சத்திரங்களை பண்டாரநாயக்க ரயில் நிலையத்திலிருந்து மருதானை வரை ரயிலில் அழைத்து வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விருது வழங்கும் நாளன்று ஆமர் சாலை சந்திப்பிலிருந்து இங்குறுகொட சந்திப்பு வரைக்குமான பிரதான சாலை மூடப்படும் என கொழும்பு போலீஸ் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











