2 நாட்களாக உதவி கோரி கதறும் போண்டா மணி..கண்டுக்கொள்ளாத திரை நட்சத்திரங்கள்
சென்னை: நகைச்சுவை நடிகர் போண்டாமணி 2 கிட்னிக்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உதவி வேண்டி கோரிக்கை வைத்துள்ளார்.
சாதாரண ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கும் முன்னணி நடிகர்கள், திரையுலகினர் இதுவரை அவரை பார்க்கவும் இல்லை பதிலும் இல்லை.
2 குழந்தைகளுடன் மருத்துவ செலவும் சேர்ந்து வறுமையில் வாடும் போண்டாமணிக்கு அமைச்சர் நேரில் சந்தித்ததும், அரசு மருத்துவமனையும் மட்டுமே தற்போது ஆறுதல் தரும் விஷயமாக உள்ளது.
திரையுலகம் பகட்டு ஆடம்பரம் அனைத்தும் கொண்ட ஒரு மாய உலகம். அங்கு வாழ இடம் தேடுபவர்கள், வாழ்பவர்கள், வசதியாக வாழ்பவர்கள், வாழ்ந்து கெட்டவர்கள் என பல ரகம் உண்டு. இதில் வாழ்ந்து கெட்டவர்களை கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். அது பொருளாதார பிரச்சினையை தாண்டி மனதால் அடையும் அவமானம் கொடிதான ஒன்று என்று சொல்வார்கள். பழைய வாழ்க்கை திரும்ப கிடைக்காது. புதிய வாழ்க்கையில் வாழ முடியாது. வறுமை வாட்டும். அலட்சியம் மனதை உருக்கும். தாங்க முடியாத வறுமையில் தான் போண்டாமணி போன்ற கலைஞர்கள் வாய்திறக்கின்றனர்.

எம்ஜிஆரே வியந்த ஆளுமை பாகவதர்..நொடிந்தவரை ஒதுக்கிய திரையுலகம்
திரையுலகில் எம்ஜிஆர் மிகப்பெரிய ஆளுமை, ஜாம்பவான். அவரே பார்த்து வியந்த ஒருவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். வெள்ளைக் குதிரையில் கம்பீரமாக அவர் வந்ததை பார்த்தபோது தேஜஸ் என்று சொல்வார்களே அதைக்கண்டேன் என எம்ஜிஆர் எழுதியிருப்பார். அப்படிப்பட்ட பாகவதர் வீட்டில் தங்கத்தட்டில் தான் சாப்பிடுவார். ஆனால் லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் சிக்கி திரையுலக வாழ்க்கை போன பின்னர் அவர் நொடிந்துபோனார். எந்த அளவுக்கு என்றால் அதை வாலியின் வரிகளிலேயே பார்ப்போம்.

கேட்பாரற்று எழும்பூர் நடை மேடையில் அமர்ந்திருந்த பாகவதர்
"சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை. நான் கவனித்து விட்டேன். ஓடிப் போய் அவரருகே சென்று, 'நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான். இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி' என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை வணங்குகிறேன். 'ஓ நீங்கதான் அந்த வாலியா..?' என்று என் கைகளைப் பற்றுகிறார். அவர் தொட மாட்டாரா என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. இன்று அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன்.

லட்சிய நடிகரை கண்டுக்கொள்ளாத இளம் தலைமுறை திரையுலகம்
அவர் தொட்டதால் அல்ல. எந்த ரயில்நிலையத்தில் அவர் ரயிலிருந்து இறங்கவிடாமல் மக்கள் அலை மோதினார்களோ அங்கே கவனிக்க ஆளில்லாமல் தனியாக அவர் அமர்த்திருந்த நிலையை பார்த்து காலம் எப்படியெல்லாம் தன் ஆளுமையை காட்டுகிறது என்று எண்ணிப் பார்க்கிறேன்" எப்பேர்பட்ட ஆளுமை, எம்ஜிஆர் வியந்த பாகவதர். நொடிந்து போனவுடன் சீண்ட ஆளில்லை. அப்பேற்பட்ட சினிமா உலகம் இது. சிவாஜி கூட வாழ்ந்தபோதே புகழிருக்கும்போதே மறைந்து போனதால் கூட்டம் அலைமோதியது. ஆனால் அவரது நண்பர் சமகால நடிகர், திமுகவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.ஆர் மறைவின்போது அஞ்சலி செலுத்த ஆளே இல்லை. இளைய தலைமுறை எட்டிக்கூட பார்க்கவில்லை.

கலைத்துறைக்கு போண்டாமணியின் கஷ்டம் பெரிய தொகை அல்ல
சினிமாவின் நிலை இதுதான். இதில் கடைகோடியில் வாடும் ஒரு கலைஞன் தனது நிலையை எண்ணி கண்ணீர் வடிக்கிறார். நடிக்கும்போது இயல்பாக இருக்கணும் என்று சாக்கடை நீரில் இறங்கியதால் ஏற்பட்ட தொற்று, கிட்னி செயலிழப்பு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு கதறுகிறார். அவருக்கு தேவை சில லட்சங்கள். கோடிகள் அல்ல. தரமான மருத்துவ சிகிச்சை. அவரது குடும்பம் இயல்பான நிலைக்கு திரும்ப உதவி. இதற்காக ஒருவர் பொறுப்பேற்க முடியாது. ஆனால் கைகள் கூடினால் காரியம் கைகூடும். அப்படிப்பட்ட நம்பிக்கையான வார்த்தைகள் எந்த முன்னணி நடிகரிடமிருந்தும் வரவில்லை.
போண்டா மணியின் வாட்டம் போக்கும் வார்த்தைகள் வரவில்லையே-திரையுலகின் மவுனம்
இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியாமல் கொடுப்பவர்கள் இருக்கலாம். ஆனால் வாங்கியவர் சொல்லிவிடுவாரே. அப்படியும் உதவி வந்ததாக போண்டா மணி சொல்லவில்லை. போண்டா மணி போன்றோரின் கூட்டு உழைப்புதான் வடிவேலு போன்ற பெரிய நடிகர்களும் பாராட்டப்பட வாய்ப்பாக அமைந்தது. கோடி ரூபாய் கொடுத்து வாகனம் வாங்கினாலும் சில ஆயிரங்கள் உள்ள ரப்பர் டயர் இல்லாவிட்டால் சாலையில் ஒட்ட முடியாது. ஆகவே போண்டாமணி போன்றவர்கள் வாட்டம் போக்க இனியாகிலும் திரையுலகின் முன்னணியினர் நம்பிக்கை அளிப்பார்களா? இந்நேரம் அவருக்கு யாராவது உதவி இருந்தால் அவர்கள் போற்றத்தகுந்தவர்களே.


Click it and Unblock the Notifications











