உசரப் பறக்கும் "ரஜினி முருகன்" கொடி.. வசூலில் தொடர்ந்து நம்பர் 1
சென்னை: பொங்கலுக்கு வெளியான படங்களில் ரஜினிமுருகன் படத்தின் வசூல் தொடர்ந்து நன்றாக இருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இதனால் பாக்ஸ் ஆபிஸின் வசூல் ராஜாவாக மாறியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த பொங்கல் தினத்தில் கதகளி, ரஜினிமுருகன், தாரை தப்பட்டை மற்றும் கெத்து என்று 4 படங்கள் வெளியாகின.
வேறு பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இந்த 4 படங்களும் பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

ரஜினிமுருகன்
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, சமுத்திரக்கனி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் திரைப்படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இதுவரை சென்னையில் மட்டும் இப்படம் 2.42 கோடிகளை குவித்திருக்கிறது. வார நாட்களிலும் கூட்டம் குறையவில்லை என்பதால் பொங்கலுக்கு வெளியான படங்களில் நம்பர் 1 என்ற இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறது ரஜினிமுருகன்.

தாரை தப்பட்டை
சசிகுமார், வரலட்சுமி நடிப்பில் வெளியான தாரை தப்பட்டை சென்னை பாக்ஸ் ஆபீஸில் 2 வது இடத்தைப் பிடித்திருக்கிறது. பாலாவின் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாலா ரசிகர்கள் படத்தை விட்டுக் கொடுப்பதாக இல்லை. இதுவரை 10 கோடியை வசூலித்திருக்கும் தாரை தப்பட்டை சென்னையில் மட்டும் 1.49 கோடிகளை வசூலித்திருக்கிறது. இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை வரலட்சுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கதகளி
பாண்டிராஜ்-விஷால் கூட்டணியில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 3 வது இடத்தைப் பிடித்திருக்கிறது. இதுவரை சென்னையில் 1.12 கோடிகளை வசூல் செய்திருக்கிறது கதகளி. படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் கூட திரைக்கதை பெரியளவில் சொதப்பி விட்டது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் மிகவும் பின்தங்கி நிற்கிறது விஷாலின் கதகளி.

கெத்து
உதயநிதி முதன்முதலாக 'கெத்து' காட்டிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது. எமி ஜாக்சனின் பொருந்தாத நடிப்பும், திரைக்கதை சொதப்பலும் சேர்ந்து படத்தை கவிழ்த்ததில் சென்னையில் இதுவரை 1.03 கோடிகளை மட்டுமே வசூலித்திருக்கிறது கெத்து.இந்தப் படத்திற்கு வரிவிலக்கு கேட்ட விவகாரத்தில் உதயநிதியின் பக்கம் சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.

இறுதிச்சுற்று, அரண்மனை 2
இன்னும் 3 தினங்களில் மாதவனின் இறுதிச்சுற்று மற்றும் சுந்தர்.சியின் அரண்மனை 2 ஆகிய படங்கள் வெளியாகின்றன. இனிமேல் இப்படங்களின் முடிவைப் பொறுத்தே பொங்கல் படங்களின் வசூல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











