பாக்ஸ் ஆபீஸில் லிங்கா தொடர்ந்து முதலிடம்.. ஆனால், மல்டிப்ளெக்ஸ்களில் காட்சிகள் குறைப்பு!
சென்னை: விமர்சனங்கள், புகார்கள், புதுப்பட ரிலீஸ் என சர்ச்சைகள் இருந்தாலும், ரஜினியின் லிங்கா படம் இரண்டாவது வாரமும் பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தில் உள்ளது.
கடந்த 12-ம் தேதி ரஜினியின் பிறந்த நாளையொட்டி வெளியானது லிங்கா. தமிழ் சினிமா காணாத அளவுக்கு தமிழகத்தின் மொத்த அரங்குகளில் 90 சதவீதம் லிங்கா மட்டுமே வெளியிடப்பட்டது.
சென்னை தவிர்த்து, சேலம் நகரில் மட்டும் அதிகபட்சமாக 18 அரங்குகளில் வெளியானது இந்தப் படம். கோவை ஏரியாவில் 100 அரங்குகளில் லிங்கா வெளியானது.
முதல் மூன்று நாட்களில் உலகமெங்கும் ரூ 104 கோடியை லிங்கா வசூலித்து சாதனைப் படைத்தது. இந்திய சினிமாவைப் பொறுத்தவரை இதுதான் அதிகபட்ச ஆரம்ப வசூல்.
ஆனால் படம் வெளியான ஆறாவது நாளே, போதிய வசூல் இல்லை, நஷ்டம் என்று கூறி சில மீடியேட்டர்கள் கூறினர்.

கிறிஸ்துமஸ் விடுமுறை
இந்த நிலையில்தான் கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை ஆரம்பித்தது. இப்போது வார நாட்களிலும் கூட்டம் வருவதால் லிங்காவே இரண்டாவது வாரமும் முதலிடத்தில் உள்ளது. வெளியிடப்பட்ட அரங்குகளில் பெரும்பாலானவற்றில் லிங்கா ஓடுகிறது. அதே நேரத்தில் மல்டிப்ளெக்ஸ்களில் சில காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் படத்துக்கு பெரிய அளவில் கூட்டம் வரவில்லை என்பது தெளிவாகிறது. படத்துக்கு கூட்டம் வந்தால் மல்டிபிளக்ஸ்களில் காட்சிகளை குறைத்திருக்க வாய்ப்பே இல்லை.

இரண்டாமிடத்தில் பிசாசு
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 19-ம் தேதி வெளியான பிசாசு இரண்டாம் இடத்தில் உள்ளது. சாதகமான விமர்சனங்கள், வாய்வழி பிரச்சாரம் படத்துக்கு கூடுதல் பலமாக இருப்பதால், அடுத்த வெள்ளி வரை இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்றுத் தரும் என நம்பப்படுகிறது. குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம் என்பதால் நஷ்டத்துக்கும் வாய்ப்பில்லை. கமர்ஷியல் வெற்றியை ருசித்த சந்தோஷத்தில் உள்ளார் மிஷ்கின்.

பிகே
ஷாரூக்கான், ஆமீர்கானின் இந்திப் படங்களுக்கு ஒரு ரெகுலர் மார்க்கெட் ஆகிவிட்டது சென்னை. டிசம்பர் 19-ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியான பிகேவுக்கு பாக்ஸ் ஆபீஸில் மூன்றாமிடம் கிடைத்துள்ளது.

தி ஹாப்பிட்
சென்னை மற்றும் முக்கிய நகரப் பகுதிகளில் மட்டும் வெளியான ஹாலிவுட் படமான ஹாப்பிட் - தி பேட்டில் ஆப் பைவ் ஆர்மிஸ் படத்துக்கும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.

நாய்கள் ஜாக்கிரதை
சிபிராஜ் தன் மறுபிரவேசத்துக்காக நம்பிய நாய் கைவிடவில்லை. வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகும் நன்றாகவே ஓடி அவரைக் காப்பாற்றிவிட்டது. படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்க இப்போதே தயாராகிவிட்டார்கள்.


Click it and Unblock the Notifications











