பாக்ஸ் ஆபிஸ்: வசூலில் ஜெயம் ரவியின் 'பூலோகத்தை' மிஞ்சியது சூர்யாவின் 'பசங்க 2'
சென்னை: பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பூலோகம், தங்கமகன் மற்றும் மாலை நேரத்து மயக்கம் போன்ற படங்களை மிஞ்சி சாதனை படைத்து வருகிறது சூர்யாவின் பசங்க 2.
வெளியாகி 2 வாரங்கள் முடிந்த நிலையிலும் வசூலில் எந்தக் குறையும் இல்லாமல் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது பசங்க 2 திரைப்படம்.
பசங்க 2, பூலோகம், மாலை நேரத்து மயக்கம் மற்றும் தங்கமகன் போன்ற படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை இங்கே காணலாம்.

பசங்க 2
கடந்த வருடத்தின் கடைசிப் படமாக வெளியான பசங்க 2 முதல் வாரத்தில் வெறும் 60 லட்சங்களை மட்டுமே வசூலித்து இருந்தது. ஆனால் 2வது வாரத்தில் 90 லட்சங்களை சென்னையில் மட்டும் வசூலித்து சாதனை புரிந்துள்ளது. குழந்தைகளை மையப்படுத்தி வந்த இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் கொடுத்த விமர்சனம் நன்கு உதவியுள்ளது. மேலும் சமீபத்தில் வந்த விடுமுறையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்ததில், தற்போது சென்னையில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது பசங்க 2.

பூலோகம்
ஜெயம் ரவியின் பூலோகம் முதல் வாரத்தில் 1.50 லட்சங்களை வசூலித்து இருந்தது. ஆனால் 2வது வார முடிவில் வெறும் 50 லட்சங்களை மட்டுமே வசூலித்து இருக்கிறது. இதுவரை சென்னையில் மொத்தமாக 2.06 கோடிகளை பூலோகம் வசூலித்துள்ளது. பசங்க 2வை ஒப்பிடும்போது பூலோகத்தின் வசூல் அதிகம் எனினும் 2 வது வாரத்தில் 50 லட்சங்களை மட்டுமே இப்படம் வசூலித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாலை நேரத்து மயக்கம்
கீதாஞ்சலி செல்வராகவனின் மாலை நேரத்து மயக்கம் கடந்த வாரத்தில் 22 லட்சங்களை வசூலித்து இருக்கிறது. படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் பசங்க 2, பூலோகம் படங்களுக்கு முன்னால் வசூலில் திணறுகிறது மாலை நேரத்து மயக்கம்.

தங்கமகன்
தனுஷ் பெரிதும் எதிர்பார்த்த தங்கமகன் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் சற்றும் எடுபடவில்லை.தனியாக போட்டியின்றி வெளியானாலும் கூட கதை ரசிகர்களை ஈர்க்காததால் படம் பெரிதாக வசூல் சாதனை நிகழ்த்தவில்லை. 3 வார இறுதியில் இதுவரை 3 கோடிகளுக்கும் சற்றுக் குறைவாக வசூலித்திருக்கிறது தங்கமகன்.
தற்போதைய நிலவரப்படி பொங்கலுக்கான படங்கள் வெளியாகும் வரை பசங்க 2, பூலோகம் இரண்டும் நல்ல வசூலை எட்டும் என்று விநியோகஸ்தர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











