26 வயதில் கருகிய இளம் நடிகரின் வாழ்க்கை

மாதவன் நடித்த ஆர்யா படத்தில் அவருடைய நண்பராக நடித்தவர் பிரவீன் குமார். 26 வயதாகும் பிரவீன் குமார், பி.பி.ஓ. ஒன்றில் வேலை பார்த்து வந்த பிரவீன்குமார், டிவி ஒன்று நடத்திய நடிப்புப் போட்டியில் வெற்றி பெற்று ஆர்யா படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
சென்னை விருகம்பாக்கத்தில் தாயார் மற்றும் தங்கையுடன் வசித்து வந்த பிரவீன் குமாருக்கும், ஆர்யா படத்தில் நடித்த 36 வயதுடைய நிஷா என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்தப் பெண்ணின் கணவர் ஒரு என்ஜீனியர். இருவரும் கருத்து வேறுபாடுடன் வாழ்ந்து வந்தனர்.
அவ்வப்போது நிஷாவின் வீட்டுக்கு வந்து போவாராம் அவரது கணவர். இந்த நிலையில் நிஷா, பிரவீன்குமார் காதல் இறுகமானது. ஆனால் இந்தக் காதலுக்கு பிரவீன்குமாரின் தாயார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் நிஷாவுடன் பிரவீன் தொடர்ந்து பழகி வந்தார். இந்த நிலையில் இருவரும் சமீபத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். வடபழனி முருகன் கோவிலில் இந்து முறைப்படி கல்யாணமும் செய்து கொண்டனர்.
கல்யாணத்தைத் தொடர்ந்து தன்னுடன் வந்து வசிக்குமாறு கூறியுள்ளார் பிரவீன் குமார். ஆனால் அதை நிஷா ஏற்கவில்லை. மாறாக, எனது வீட்டுக்கு வந்து விடுமாறு பிரவீன் குமாரை வலியுறுத்தி வந்தார்.
இதனால் மனக் குழப்பமடைந்தார் பிரவீன். இந்த நிலையில் தனது தாயாரும், தங்கையும் வெளியில் சென்றிருந்த நேரம் பார்த்து தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார்.
பிரவீன் தனது தற்கொலைக்கு யாரையும் காரணம் காட்டி கடிதம் எதையும் எழுதவில்லை. இருப்பினும், பிரவீன் குமாரின் தாயார் கீதா, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நிஷா மீது புகார் கொடுத்துள்ளார். தனது மகனை ஏமாற்றி கல்யாணம் செய்து கொண்டதாகவும், கல்யாணத்திற்குப் பிறகு சேர்ந்து வாழ மறுத்ததாகவும், இதன் காரணமாகவே பிரவீன் தற்கொலை செய்து கொண்டதாகவும் தனது புகாரில் கூறியுள்ளார்.
அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சர்ச்சையில் சிக்கிய நிஷா தனது மகனுடன் தலைமறைவாகி விட்டார்.
நல்ல அழகும், திறமையும் உடைய பிரவீன் குமார், இப்படி அல்பாயுசில் போய்ச் சேர்ந்தது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











