'மனுஷன நம்புறதவிட பேயை நம்பலாம்'... திரையுலகமே இப்டி சொன்னா எப்டி!
மனிதர்களை நம்பி படம் எடுப்பதைவிட பேயை நம்பி படம் எடுக்கலாம் என திரையுலகினர் உறுதியாக நம்புகின்றனர்.
Recommended Video

சென்னை: தமிழ் சினிமாவே பேய் படங்களை நம்பி தான் இருக்கின்றன என்பது போல் பிரபல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பேசியது வியப்பாக உள்ளது.
தீபன் நாராயண் இயக்கத்தில் அரசு, மோனா நடித்துள்ள படம் 'பேய் எல்லாம் பாவம்'. அப்புக்குட்டி, மைம் கோபி, ஜார்ஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

'பேய் எல்லாம் பாவம்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பிரபல திரைப்பட இயக்குனர்கள், பேரரசு, ஏ.வெங்கடேஷ், ராசி அழகப்பன், ஜாகுவார் தங்கம், பிக் பாஸ் ஸ்நேகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் பேசிய அனைவரும் பேயை சிலாகித்து பேசினர். பேய் எடுத்தால் போட்ட பணத்தில் 75 சதவீதம் திரும்பக் கிடைப்பது உறுதி என தெரிவித்தனர். பேயை நம்பினோர் கைவிடப்படார் என்றும் அவர்கள் கூறினர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் ராசி அழகப்பன் கூறியதாவது," பேய்க்கும் எனக்கும் நீண்ட கால தொடர்பு உண்டு. பேய்யை நம்பினோர் கைவிடப் படார். ஊரைவிட்டு வெளியே போய்க்கூட பிழைத்துக் கொள்ளலாம்.
அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஹாலிவுட் இயக்குனர் மனோஜ் நைட் சாமளான். பாண்டிச்சேரியில் இருந்து அமெரிக்கா போய் சுமார் 15 பேய் படங்களை எடுத்துவிட்டார். நான் அவரை சமீபத்தில் பார்க்கும் போது கூட கிளாஸ் எனும் பேய் படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த படத்தில் வரும் பேய்யோடு குடும்பம் நடத்தலாம் போல் இருக்கிறது. இந்த பேய் நன்றாக டான்ஸ் ஆடுகிறது, லிப்ஸ்டிக் போடுகிறது, சூப்பராக பேசுகிறது.
வியாபார ரீதியாக பார்த்தால், பேய் படங்களில் போடப்படும் பணத்தில் 75 சதவீதம் உறுதியாக திரும்பக் கிடைத்துவிடும். எனவே மனிதனை நம்பி படம் எடுப்பதைவிட பேயை நம்பி படம் எடுத்துவிடலாம்", என அவர் கூறினார்.
இதே கருத்தை தான் இயக்குனர்கள் பேரரசு, வெங்கடேஷ், பாடலாசிரியர் ஸ்நேகன், பி.ஆர்.ஓ. பெருதுளசி பழனிவேல் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











