'வாய்தா'வுக்கு முற்றுப் புள்ளி... துப்பாக்கி வழக்கு தள்ளுபடி!

நார்த் ஈஸ்ட் பிலிம் ஓர்க்ஸ் நிறுவனம் சார்பில் கள்ளத்துப்பாக்கி படத்தைத் தயாரிக்கும் ரவி என்பவர், துப்பாக்கி தலைப்புக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், "கள்ளத்துப்பாக்கி' என்ற பெயரில் படம் தயாரித்து வருகிறேன். இந்த படத்தை பிரபல சினிமா தயாரிப்பாளர் கலைபுலி தாணு, 'துப்பாக்கி என்ற பெயரில் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். படத்தை முருகதாஸ் இயக்குகிறார்.
நான் தயாரிக்கும் பெயரின் தலைப்பில், ஒரு பகுதியை பயன்படுத்தியுள்ளனர். தலைப்பு வடிவமைப்பும் ஒரே மாதிரி உள்ளது.
இந்த சூழலில் படத்தை வெளியிட்டால், எனக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே துப்பாக்கி படத்தின் தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும்', என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள், துப்பாக்கி என்ற தலைப்புக்கு இடைக்கால தடை விதித்து கடந்த ஜுன் மாதம் உத்தரவிட்டார். இந்த இடைக்கால தடை ஒவ்வொரு முறையும் நீடிக்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட 10 முறை தடை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி வினோபா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்ந்த ரவி சார்பில் ஆஜரான வக்கீல் ஆனந்தராமன், 'மனுதாரருக்கும், எதிர்மனுதாரர்களுக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டதால், இந்த வழக்கை வாபஸ் பெறுகிறோம்' என்று கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 'துப்பாக்கி' தலைப்புக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











