காவிரி விவகாரம்... பட்டும் படாமலும் எதிர்க்கும் நடிகர் சங்கம்?
தண்ணீர் தர மாட்டேன் என்று அடாவடி பண்ணும் கர்நாடகாக்காரர்களே தெருவில் இறங்கி போராடுகிறார்கள். ஆனால் நம் வாழ்வாதாரத் தேவையான தண்ணீர் பிரச்னையில் நாம் எல்லாம் உட்கார்ந்தபடியே அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டிருக்கிறோம்... இதுதான் கர்நாடகாவுக்கும் நமக்குமான வித்தியாசம்.
தமிழ்நாட்டில் இருக்கும் சங்கங்கள் எல்லாம் இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று முதல்வரை துதிபாடி அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதில் நடிகர் சங்கமும் ஒன்று.

நேற்று செயற்குழு கூட்டி விவாதித்து வெளியிட்ட அறிக்கையை படித்துப் பார்த்தால் இது தெளிவாக புரியும்.
கர்நாடக நடிகர் சங்கம் தீவிரமாக போராடும் நிலையில், இங்கிருக்கும் நடிகர் சங்கம் தமிழ் நடிகர்கள் சங்கமாக குரல் கொடுக்காமல் தென்னிந்திய நடிகர் சங்கமாகத்தான் குரல் கொடுத்திருக்கிறது.
'கடந்த காலங்களில்-
தென்னிந்திய நடிகர் சங்கம் எப்போதுமே தமிழர்களுக்கும், இந்திய உணர்வுகளுக்கும் பிரச்சனை என வரும்போது, அதற்காக குரல் கொடுக்க தயங்கியதில்லை.'
இது அவர்கள் அறிக்கையில் ஒரு வரி... எனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ் திரைப்பட நடிகர் சங்கம் என்று மாற்றுவது அவசியம் என எதிர்ப்பு குரல்கள் வலுக்கின்றன.
நேற்று விஷால் பேட்டியளித்த போதே கொஞ்சம் தடுமாறினார். 'சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வந்தவுடன் எமோஷனல் ஆவது சகஜம் தான். இருந்தாலும் கொடும்பாவியை எரிப்பது, முதல்வரை தரக்குறைவாக பேசுவது போன்றவற்றை தவிர்த்திருக்கலாம்' என்று ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்...பூசாத மாதிரியும் இருக்கணும் என்ற ரீதியில் பேசினார்.
இதற்கான எதிர்வினைகள் மிகப் பலமாக கிளம்பப் போகின்றன. யாராக இருந்தாலும் இருக்கும் மாநிலத்துக்கம் மக்களுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும். அதை கர்நாடகத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்!


Click it and Unblock the Notifications











